விபத்தில் சிக்கிய கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் கார்! ஈரோட்டிலிருந்து திரும்பிய போது நடந்த நிகழ்வு!
நள்ளிரவில் கார்த்தி சிதம்பரத்தின் கார் விபத்தில் சிக்கியது.
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நள்ளிரவில் நடந்த சாலைவிபத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் கார் சிக்கியது.
கார் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணித்த கார்த்தி சிதம்பரம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தார்.
விபத்து குறித்து மாயனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு மாற்றுக் காரில் புறப்பட்டு சென்றார் கார்த்தி சிதம்பரம்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று பிரச்சாரம், காங்கிரஸ் வழக்கறிஞர்கள் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் என பரபரப்பாக இருந்த கார்த்தி சிதம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இரவோடு இரவாக கும்பகோணம் புறப்பட்டார். அப்போது அவரது கார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. கார்த்தி சிதம்பரம் பயணித்த கார் டொயோட்டா பார்ச்சூனர் என்பதால் அதன் முன்பக்கம் மட்டும் சேதாரம் ஆனது.

கார்த்தி சிதம்பரம்
மற்றபடி அதில் பயணித்த கார்த்தி சிதம்பரம் உட்பட யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. தனது காரை அங்கேயே விட்டுவிட்டு மாயனூர் காவல்துறையினருக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்த கார்த்தி சிதம்பரம், மாற்றுக் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் கார் விபத்திய சிக்கிய தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்துக்கு காரணம்
தன்னிடம் விபத்து பற்றி விசாரிப்பதற்காக தொடர்பு கொண்டவர்களிடம் மிகவும் கேசுவலாக நடந்த நிகழ்வு குறித்து விவரித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம். இதனிடையே ஈரோட்டிலிருந்து புறப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் கார் சரியான முறையில் தான் சென்றது என்பதும் அதில் மோதிய எதிர் வாகனம் தான் விபத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வழக்குப்பதிவு
நள்ளிரவில் நடந்த விபத்து குறித்து கரூர் மாவட்டம் மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் தனது கார் சேதத்துக்கு காப்பீட்டு நிறுவனத்திடம் கார்த்தி சிதம்பரம் நிவாரணம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications