செந்தில்பாலாஜி இல்லாத நேரம்! கரூர் திமுகவில் வெடித்த கோஷ்டிப் பூசல்! ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கலகம்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், கரூர் மாவட்ட திமுகவில் கோஷ்டிப்பூசல் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் இடையே கோஷ்டிப்பூசல் இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் கரூர் மாவட்ட திமுகவை பொறுத்தவரை அனைத்து நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக வைத்து வந்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதனால் மற்ற மாவட்டங்களை போல் பட்டவர்த்தனமாக சண்டை சச்சரவுகள் கரூர் மாவட்ட திமுகவில் நிகழ்ந்ததில்லை. ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லாத நேரமாக பார்த்து, ஆளுங்கட்சி நகராட்சி சேர்மனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் போர்க்கொடி உயர்த்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி தலைவியாக இருப்பவர் திமுக சிறுபான்மையினர் நல அணியை சேர்ந்த முனவர் ஜான். இவருக்கு எதிராக இவரை மாற்றக்கோரி எதிர்ப்பு தெரிவித்து 20 திமுக கவுன்சில்கள் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். முனவர் ஜானை மாற்றச் சொல்வது மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் அனைவரும் திமுக கவுன்சிலர்கள் தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஊரில் இல்லை, அவரது தம்பி அசோக்கும் ஊரில் இல்லை, இந்த நேரம் பார்த்து இந்தப் பிரச்சனை வெடித்திருப்பதால் தனக்கு எதிராக கிளம்பியிருக்கும் கவுன்சிலர்களை எப்படி ஆஃப் செய்வது எனத் தெரியாமல் திணறி வருகிறார் திமுக நகராட்சி தலைவி முனவர் ஜான்.
இதனிடையே செந்தில்பாலாஜி வெளியே வரும் வரை பொறுமை காக்குமாறும் அவர் வந்தபிறகு பேசி தீர்வு காணலாம் எனவும் செந்தில்பாலாஜி ஆதரவு நிர்வாகிகள் சிலர் கவுன்சிலர்களை கேட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications