கரூரில் காதலிக்காக எடுத்த ரிஸ்க்.. லாட்ஜில் ரூம் போட்டு யோசித்து.. வளைத்தது போலீஸ்.. தம்பதி எஸ்கேப்
கரூர்: திருமணமான காதலியை அவரது கணவருடன் கொல்ல திட்டம் தீட்டிய ஒரு தலை காதலர் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சுங்க வாயிலில் உள்ள லாட்ஜில், இளைஞர்கள் சிலர் கத்தி, அரிவாளுடன் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார், சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு நேரடியாகவே கிளம்பி சென்றனர்.. அங்கு அறைகளை சோதனை செய்து, விசாரணையையும் மேற்கொண்டனர்.

நண்பர்கள்: அப்போது அறை ஒன்றில், சிவசங்கர் என்பவர் ரூம் போட்டு தங்கியிருந்தார்.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த சிவசஙகருக்கு 24 வயதாகிறது. இவருடன் அவரது நண்பர்கள், அதாவது, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வெம்பட்டியில் வசிக்கும் செல்லூர் ஆனந்த் (38), திண்டுக்கல் மாவட்டம் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் (20) போன்றோரும் தங்கியிருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் உள்ள உடைமைகளை சோதனை செய்தபோதுதான், அரிவாள், கத்திகள் உள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு சிவசங்கரிடம் விசாரணையை போலீசார் மேற்கொண்டபோது மொத்த உண்மைகளையும் சொன்னார்.
2 வருட காதல்: அதாவது, திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்த 19 வயது பெண்ணுடன், சிவசங்கரன் முகநூலில் அறிமுகமாகியிருக்கிறார்.. பிறகு இருவருமே 2 வருடங்கள் காதலித்து வந்துள்ளனர். ஆனால், ஒருகட்டத்தில் சிவசங்கரனின் நடவடிக்கை பிடிக்காமல், அந்த பெண், அவரை விட்டு விலகியிருக்கிறார்..
பிறகு, கரூரை சேர்ந்த 27 வயது இளைஞரை அந்த பெண் காதலித்து வந்ததுடன், கடந்த 13ம் தேதி, அவரையே திருமணமும் செய்து கொண்டார்... தற்போது, கரூரில் கணவருடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்.
காதல் தோல்வி: இதனிடையே காதல் தோல்வியால் சிவசங்கர் நொந்துபோனார்.. உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்து, தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று முடிவெடுத்தார்.. இதற்காக அந்த பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, கூலிப்படையையும் ஏற்பாடு செய்தார். புதுமண தம்பதியை கொல்வதற்காக 2 பேர் முன்வந்தனர். அவர்களுடன் சேர்ந்து கொலை செய்வதற்காக, கரூரில் வந்து ரூம் போட்டு தங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது,
இதையடுத்து தாந்தோணிமலை போலீஸார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்... இந்த விசாரணை நடந்துகொண்டிருந்தபோதுதான், சிவசங்கரன் மீது சிவகங்கை நகர போலீஸ் ஸ்டேஷனிலும், ஆனந்த் மீது மதுரை மாநகர விளக்குத் தூண் போலீஸிலும் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அசம்பாவிதம்: இதனிடையே, அசம்பாவிதம் நடைபெறும் முன்பாகவே, குற்றவாளிகளை ஓட்டலிலேயே வைத்து கைது செய்ததற்கு பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், தனிப்பிரிவு காவலர் ராமலிங்கத்தை காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்...
அதுமட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்க வருபவர்கள் தொடர்பான ஆவணங்களை சரி பார்த்து தங்க வைக்க வேண்டும் என்றும், சந்தேகம் இருந்தால், தங்கும் விடுதி உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
பரபரப்பு: புதுமணப்பெண்ணை கொலை செய்ய, கூலிப்படையினருடன் ஆயுதங்களுடன் தங்கியிருந்து சதித்தீட்டம் தீட்டிய 3 பேர் கைதான சம்பவம் கரூரில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications