கரூர் மருத்துவமனைக்குள் புகுந்து.. காதல் மனைவியை துடி துடிக்க கொன்ற கணவன்
கரூர்: பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லாத அபாயமான ஒரு சூழல் தமிழகத்தில் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறு வருகின்றனர். கரூரில் காதல் திருமணம் செய்த தம்பதிக்கு நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. கணவன் தாக்கியதில் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் கோபம் தீராத கணவன், இன்று அதிகாலை மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகளவு நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று காலை மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ருத். இவர் தனியார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சமீபகாலமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி மோதல், வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இரவும் விஷ்ருத் - ஸ்ருதி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மோதல் முற்றி கை கலப்பாக மாறியுள்ளது. விஷ்ருத் தாக்கியதில் ஸ்ருதி பலத்த காயமடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் ஸ்ருதியை மீட்டு நள்ளிரவு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஸ்ருதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
விஷ்ருத்துக்கு ஸ்ருதி மீதான கோபம் அடங்கவில்லை. இதனால் அவர் இன்று காலை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மனைவியை பார்ப்பதற்காக தான் வந்துள்ளார் என்று தான் அங்கிருந்தோர் நினைத்தனர். ஆனால் விஷ்ருத் கண் இமைக்கும் நொடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஸ்ருதியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார். மனைவியை கொலை செய்துவிட்டு விஷ்ருத் அங்கிருந்து உடனடியாக தப்பி சென்றுவிட்டார். பட்டப் பகலில் மருத்துவமனைக்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய விஷ்ருத்தை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து குளித்தலை காவல்துறையினர் கூறுகையில், "விஷ்ருத் சென்னையில் பணியாற்றிய போது ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த காதல் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ருத்தின் தந்தை ராமசாமி காவல்துறையில் டி.எஸ்.பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையிலும் இருந்துள்ளார்.
கணவன் - மனைவி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்று அந்த மோதல் முற்றி ஸ்ருதியை விஷ்ருத் தாக்கியுள்ளார். இன்று அதிகாலை மருத்துவமனைக்கு சென்ற விஷ்ருத், ஸ்ருதியை 3 இடங்களில் ஆழமாக குத்தியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். ஸ்ருதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம்." என்றனர்.












Click it and Unblock the Notifications