கண்டா வரச்சொல்லுங்க.. அவர கையோடு கூட்டி வாருங்க.. எம்பி ஜோதிமணியை காணவில்லை.. கரூரில் போஸ்டர்
கரூர்: கரூர் தொகுதி எம்பி ஜோதிமணியை காணவில்லை என அப்பகுதி மக்கள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்பியாக இருப்பவர் ஜோதிமணி. இவரது குடும்பம் அரசியல் குடும்பமாகும். இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பார்ப்பதற்கு எளிமையாக இருப்பார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தலுக்காக சுட்டெரித்த வெயிலில் வீடு வீடாக கடுமையாக பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றவுடன் அந்த தொகுதியையே சுற்றி சுற்றி வந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல்! பெரம்பலூரில் களமிறங்குகிறாரா அமைச்சர் கே.என்.நேரு மகன்! பின்னணி என்ன?
தமிழக பிரச்சினை
நாடாளுமன்றத்தில் தமிழக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர். ராகுல்காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர். அவர் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் ஜோதிமணிதான் மொழிப்பெயர்ப்பாளராக இருந்துள்ளார். கரூர் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஜோதிமணி கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில்தான் அக்கா- தம்பி என இருந்த ஜோதிமணிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எம்பி ஜோதிமணி
அது போல் கரூர் ஆட்சியரை கண்டித்து எம்பி ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார். ஒரு எம்பியாக தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருந்தார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார்.
ஜோதிமணி
ஆரம்பத்திலிருந்து திமுகவுடன் சேர்ந்து தனது தொகுதியில் செயல்பட்ட ஜோதிமணி, திடீரென மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் திமுகவினர் ஜோதிமணியை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜோதிமணி தேர்வு செய்யப்படுவார் என சொல்லும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன.
ராகுல் காந்தி
மேலும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தில் ஜோதிமணியும் இணைந்து தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நடைபயணம் செய்து வருகிறார். வாக்களித்து வெற்றி பெற செய்த கரூர் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதாக ஜோதிமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
எம்பி ஜோதிமணியை காணவில்லை
இந்த நிலையில்தான் ஜோதிமணி எம்பியை காணவில்லை என கரூர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சுவர்களில் மட்டுமின்றி சமூகவலைதளங்களிலும் டிரென்டாகி வருகிறது. அந்த போஸ்டரில் பெயர் ஜோதிமணி, பிடித்த இடம் போலீஸ் வேன், பார்லிமென்ட் கேன்டீன், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம். பிடித்த பொழுதுபோக்கு கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளான் பிரியாணி சமைப்பது, பிடித்த நாடு இத்தாலி, மறந்தது கரூர் தொகுதி எம்பி என்பதை, காணாமல் போன தினம் மே 23 (கரூர் எம்பியாக பதவியேற்ற பிறகு), நாடாளுமன்ற கேன்டீனில் சலுகைவிலையில் பஜ்ஜி, போண்டா சாப்பிட்டதை தவிர இவரால் தொகுதிக்கு எந்தவித பயனும் இல்லை என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் கண்டா வரச் சொல்லுங்க... அவர கையோடு கூட்டி வாருங்க.. என்ற பாடல் வரியும் இடம் பெற்றுள்ளது.