கரூர் துயரம்.. ”தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.. ச்ச” வீடியோ கடைசியில் சத்யராஜ் சொன்ன வார்த்தை!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்த்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். தவறு செய்தவன் திருந்த பார்க்க வேண்டும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் என்று கூறியுள்ள சத்யராஜ், தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால், தவறு திரும்பவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தபோது பேசுகையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஸ்டாலின் பேசுகையில், அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது துயரமான சம்பவம். இது இதுவரை நடக்காதது, இனிமேல் நடக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இதன்பின் கரூர் அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் உயிரிழந்த உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், "கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.. தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்றி, தவறு சிறிதாக இருக்கும் போதே திருத்திக் கொள்ள வேண்டும். தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால், தவறு திரும்பவும் வராமல் பார்த்துக்கோ.. ச்ச" என்று தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் மக்களிடையே நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications