கத்திக்குத்து பட்டவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்? செந்தில் பாலாஜி கிடுக்கிப்பிடி கேள்வி
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் யாரோ ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திவிட்டார் என்று சோசியல் மீடியாவில் சொல்லி வந்த நிலையில், அந்த நபருக்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதனிடையே தவெக தரப்பில் சோசியல் மீடியாவில் ஏராளமான வதந்திகள் பரப்பப்பட்டன. குறிப்பாக கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.

ஜெனரேட்டர் அறை உடைக்கப்பட்டது, செருப்பு வீசப்பட்டது, ஆம்புலன்ஸ்களை அனுப்பியது, குறுகலான இடத்தை தேர்வு செய்ய வைத்தது என்று அத்தனைக்கும் செந்தில் பாலாஜியையே தவெகவினர் குற்றம்சாட்டினர். இதனிடையே சோசியல் மீடியாவில் தவெக கூட்டத்தில் சிலர் கத்தியால் கீறல் போட்டதாக அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்தார். அதில் செந்தில் பாலாஜி பேசுகையில், எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும், இனி இதுபோன்று நடக்கக் கூடாது. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. காவல்துறை எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால் தான் இவ்வளவு பிரச்சனை.
கூட்டம் அதிகமாகியதால் ஜெனரேட்டர் அறை தடுப்புகள் உடைக்கப்பட்டு, அக்கட்சியினர் உள்ளே செல்ல தொடங்கினர். அதனை வீடியோவிலேயே பார்க்க முடியும். இதன் காரணமாகவே ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது. மின் விநியோகம் என்றும் தடை செய்யப்படவில்லை. அதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு வருவது கட்டுப்பாடற்றக் கூட்டம்.. அதனை கட்டுப்படுத்துவது எளிதல்ல.
அதேபோல் கரூர் துயர சம்பவத்தை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் பேசி வருகின்றனர். எந்த நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல், செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், அதனை சரி செய்யவும் முயற்சி எடுக்காமல் யார் மீதாவது பழிபோட வேண்டுமென்று அரசை நோக்கி சிலர் சோசியல் மீடியாவில் கருத்து பதிவிடுகின்றனர்.
சமீபத்தில் கூட தவெக பிரச்சாரக் கூட்டத்தில் யாரோ ஒருவர் இன்னொரு நபரை கத்தியால் குத்திவிட்டார் என்று சோசியல் மீடியாவில் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையெனில் அந்ய்த நபருக்கு எங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற அடிப்படை தகவலையாவது சொல்ல சொல்லுங்கள். கத்தியால் குத்தப்பட்டவர்களுக்கு அல்லது கத்தியால் கீறல் ஏற்பட்டதற்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications