கரூருக்கு பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு? செந்தில்பாலாஜி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிறகு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர் சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் நிலையில், 4 தொகுதிகளை மட்டும் உள்ளடக்கிய கரூர் மாவட்டத்தையும் சேர்த்துக் கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது எனக் கருதப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதமானதல்ல எனக் கூறி, நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நேற்றைய தினம் தீர்ப்பளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்ற அமலாக்கத் துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இது அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விசாரணையிலிருந்து தப்ப முடியாது என்பதை நேற்றைய தீர்ப்பு உணர்த்தியுள்ளது. இதனால் செந்தில்பாலஜி விவகாரம் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை. இந்நிலையில் தான் கரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நேரு நியமிக்கப்படலாம் என கரூர் புறநகர் மாவட்ட திமுகவினராலேயே முணுமுணுக்கப்படுகிறது.
இதனிடையே செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டுவதற்கான சட்ட ஆலோசனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேல்முறையீட்டில் செந்தில்பாலாஜி கைது சட்டவிரோதமானது என ஒரு வேளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட அவருக்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரையிலாவது ஓய்வு வேண்டும் என்பதற்காக தான் மாற்று பொறுப்பு அமைச்சர் பற்றிய யோசனை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications