அதே மாதிரி கொண்டை, க்ளோஸ் நெக் ஜாக்கெட்.. எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கு
ஜெ.ஆன்மா மன்னார்குடி குடும்பத்தை மன்னிக்காது என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர்: அதே மாதிரி கொண்டை, க்ளோஸ் நெக் ஜாக்கெட் என்று போட்டுக்கொண்டு ஆட்சியை பிடிக்க நினைத்தவர்களை ஜெயலலிதா ஆன்மா சிறைக்குள் தள்ளிவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் அடுத்த தளவாபாளையத்தில் அமமுக-வில் இருந்து விலகியவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு அதிமுகவில் இணைந்தனர். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த அமாவாசை
இந்த அமாவாசைக்குள் ஆட்சி கலைந்து விடும், அடுத்த அமாவாசைக்குள் ஆட்சி கலைந்து விடும் என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஒரு அமாவாசைக்கு கூட கட்சி தாங்காது என்றார்கள். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி இந்த ஆட்சி தொடருகிறது.

ஜெயில்
ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லையே, பிறகு ஏன் அவர் சொத்து சேர்க்க வேண்டும். மன்னார்குடி கும்பல் ஜெயலலிதா வீட்டில் முகாமிட்டு கொண்டது, ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தது. அவங்க செய்த இந்த காரியத்தால்தான் ஜெயலலிதா ஜெயிலுக்கு போகும்படி ஆகிவிட்டது.

க்ளோஸ் நெக்
இந்த நிலையில் பிரபல மேக்கப் கலைஞர்கள் வருகிறார்கள். அதுவும் மும்பையில் இருந்து விமானத்தில் வரவழைத்து, ஜெயலலிதா போல கொண்டை போட செய்து, ஜெயலலிதா போல க்ளோஸ் நெக் ஜாக்கெட் தைத்து போட்டுக்கொண்டு ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்.

ஆன்மா சும்மாவிடாது
ஜெயலலிதா இறந்துவிட்டாலும் அவருக்கு துரோகம் செய்தவர்களை, ஜெயலலிதா ஆன்மா பிடித்து அவரை பெங்களூரு சிறையில் தள்ளியது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அவர்களையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது" என்றார்.












Click it and Unblock the Notifications