இரவோடு இரவாக உத்தரவு.. நள்ளிரவிலும் நீடித்த நிலமோசடி கேஸ்.. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
கரூர்: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த காட்டூரை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவு: இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். எனவே, விஜயபாஸ்கரை தேடும் பணி தீவிரமானது..
இறுதியில், கடந்த 16ம் தேதி கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருந்தனர்.. பின்னர் கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்... அந்த நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது..
சிறையிலடைப்பு: முன்னதாக, விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.. விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்டார்... இப்படிப்பட்ட சூழலில், விஜயபாஸ்கர் தரப்பில் ஜாமீன் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த மனு மீதான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்றும், இன்று நள்ளிரவும் நடைபெற்றது.
இறுதியில் 2 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். காலை, மாலை என இருவேளைகளிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நிபந்தனை ஜாமீன்: அதுமட்டுமலல, மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை இது தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.. இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications