எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயம்.. முடியவே முடியாது! உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
டெல்லி: எச்சில் இலையில் உருளும் சம்பிரதாயத்திற்கு அனுமதி கோரி நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரா சபா தரப்பில் உச்சநீமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. தற்போது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

கரூரில் நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரா கோயில் இருக்கிறது. இங்கு ஆண்டு தோறும் ஆராதனா விழா நடக்கும். இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், எச்சில் இலை மீது உருண்டு வழிப்பாடு செய்வார்கள். இது குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. தொற்று நோய் ஏற்படும், சுயமரியாதையான வழிபாடு கிடையாது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. இதனையடுத்து, எச்சில் இலை மீது பக்தர்கள் உருண்டு வழிபடுவதை தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2015ல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் இந்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு நடந்த விழாவில் எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
உயர்நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மண்மங்கலம் வட்டாட்சியர், திருவண்ணாமலையை சேர்ந்த அர்ச்சகர் அரங்கநாதன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் இந்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் எச்சில் இலை மீது உருண்டு செய்யப்படும் வழிபாடு தடை செய்ய வேண்டும், உயர்நீதிமன்ற கிளை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
எதிர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்கள், "இந்த சடங்கு ஒரு வழிபாடாக பின்பற்றப்பட்டு வருகிறது. சாதி வேறுபாடின்றி அனைத்து சாதியினரும் எச்சில் இலை மீது உருண்டு இந்த வழிபாட்டில் ஈடுபட்டுகின்றனர். எனவே இதற்கு தடை விதிக்க கூடாது" என்று வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். மட்டுமல்லாது எச்சில் இலை மீது உருள தடை விதித்தனர்.
முன்னதாக இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தவறாக இருந்தாலும் அதை தனி நீதிபதி பின்பற்றியிருக்க வேண்டும். அல்லது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியிருக்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் தடையை நீக்கியிருக்கிறார். அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று உத்தரவு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications