ஒரே பெயரில் இரண்டு பேர்.. தெரியாமல் முன்னாள் காதலிக்கு போன் போட்ட மாணவன்.. அடுத்து நடந்த பயங்கரம்
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெரியாமல் முன்னாள் காதலிக்கு போன் போட்ட மாணவர், கோபப்பட்டு மாணவி செய்த காரியத்தால், அநியயமாக மாணவரின் நண்பர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேர் குளித்தலை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்கபிள்ளையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் மகன் விக்னேஷ்க்கு 16 வயது ஆகிறது. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஐடிஐ-யில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மோகனின் உறவினர் மகன் குரு பிரகாஷ் (19), குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
காதல் பிரச்சனை: அய்யர்மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அய்யர்மலையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வருகிறார். அம்மாணவியும், குருபிரகாஷும் 9-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்தார்களாம். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்களாம்.

இந்த நிலையில், குருபிரகாஷின் தோழி ஒருவர் நாமக்கல்லில் படிக்கிறார். இந்நிலையில் குருபிரகாஷ், அய்யர்மலை மாணவி பெயரையும், அம்மாணவி பெயரையும் ஓரே பெயரில் போனில் சேமித்து வைத்தாக கூறப்படுகிறது. ஒரு நாள் குழப்பம் ஏற்பட்டு அய்யர்மலை மாணவிக்கு போன் சென்றுவிட்டது. கடந்த சில மாதங்களாக பேசாமல் இருந்த நிலையில், தற்போது போனில் குருபிரகாஷ் பேசியதால் மாணவி கோபம் அடைந்தார்.
குருபிரகாஷ் தன்னை கிண்டல் செய்வதாக மாணவி நினைத்திருக்கிறார். இதனை அந்த மாணவி தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்து தற்போது திருச்சியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த அருண் (20), அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பர்கள் கண்டியூரை சேர்ந்த விஜய் (21), கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (21), லாலாபேட்டை அருகேயுள்ள வீரக்குமரன்பட்டியை சேர்ந்த செல்லத்துரை (21) ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார்
இந்நிலையில், அய்யர்மலை பேருந்து நிறுத்தம் அருகே குருபிரகாஷ், விக்னேஷுடன் நேற்று நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த அருண், விஜய், சரவணன், செல்லத்துரை ஆகியோர் குருபிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். விக்னேஷ் இதில் படுகாயம் அடைந்தார்.
குளித்தலை அரசு மருத்துவமனையில் விக்னேஷ் சேர்க்கப்பட்ட நிலையில், நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து அருண், விஜய், சரவணன், செல்லத்துரை ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications