கரூரில் தொடரும் தற்கொலை... கல்லூரி மாணவி தற்கொலையால் மீண்டும் பரபரப்பு!.. நடந்தது என்ன?
கரூர் : கரூரில் பாலியல் தொல்லை காரணமாக நேற்று ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
19 வயதே ஆன பி.காம். படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதால் சக மாணவிகளும் கரூர் பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாயில் நடந்த தூய்மைப் பணி முகாம் தமிழக இளைஞர் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டு
டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி
கரூரில் வெங்கமேடு காமராஜ் நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் தற்போது நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் வசித்து வருகிறார்.
வணிகம் படித்து வந்த மாணவி
மோகனின் இரண்டாவது மகள் கிருத்திகா. இவர் தற்போது தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கிருத்திகா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் படிப்பிலும் கவனம் செலுத்த முடியாத நிலை கிருத்திகாவுக்கு ஏற்பட்டுள்ளது.
திடீரென தற்கொலை முடிவு
இந்நிலையில் தந்தையும், தாயும் கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மகள் கிருத்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மகள் திடீரென விபரீத முடிவு எடுத்ததை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தார் வீட்டிற்கு வந்து நடந்ததை விசாரித்தனர்.
போலீசார் விரைந்தனர்
பின்னர் மாணவியின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வெங்கமேடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல்கள் சேமிப்பு
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதாக உறுதி அளித்துள்ள போலீசார் அவரது செல்போனில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். மாணவியின் செல்போனில் வந்த தகவல்கள், அழைப்புகள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என கூறப்படுகிறது.
மீண்டும் ஒரு இழப்பு
சமீபத்தில் கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கரூரில் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் மாணவ சமுதாயத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொல்லையால் பலி
இதுமட்டுமின்றி இதே கரூர் நகரப் பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக நேற்று ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரண வழக்கும் அவர் எழுதிவைத்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கரூரில் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவத்தால் மாணவ சமுதாயத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.