1-ம் பரிசு வாஷிங் மிஷின், 2-வது கிரைண்டர், தடுப்பூசி போடுங்க, பரிசை அள்ளுங்க.. கலெக்டர் அறிவிப்பு
கரூர் மாவட்ட கலெக்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
கரூர்: தடுப்பூசி செலுத்தி கொண்டதால் அதற்கான சிறப்பு பரிசுகள் உண்டு என்று கரூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.. ஒவ்வொரு மாவட்டமும், 100 சதவீதத்தை எட்டும் அளவுக்கு தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
தடுப்பூசியை செலுத்தி கொள்ள முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக ஊக்கப்படுத்த, வித்தியாசமான பரிசுகளை, அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

டாஸ்மாக்
2 மாதங்களுக்கு முன்பு, தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டும் மதுபானம் என்ற அறிவிப்பு வெளியானது.. அந்த வகையில் இப்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதனை கரூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் வருகிற 10-ந் தேதி முதல் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.. அந்த முகாமினை நடத்துவதற்கு முக்கிய ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் மேற்கொண்டுள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ்
அதற்கான ஆலோசனை கூட்டத்தையும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அதிகாரிகளுடன் நடத்தினார். அப்போது அவர் சொன்னதாவது: "கரூர் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டது... வருகிற 10-ந்தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை 5-ம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 22 ஆயிரத்து 735 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 1 லட்சத்து 68 ஆயிரத்து 650 பேரும் செலுத்தி இருக்கிறார்கள்.

பொறுப்பாளர்
மற்றவர்களுக்கு இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்.. அப்போது 100 சதவீத இலக்கையும் நாம் எய்திடுவோம்.. அதற்காக ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்... ஒரு நபருக்கு 50 முதல் 60 வீடுகள் இலக்கீடாக வழங்கப்படலாம்... இந்த கணக்கெடுப்புக்காகவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் விஏஓ, கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்பட வேண்டும்.

கணக்கெடுப்பு பணி
இந்த குழுக்களை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளின் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும்.. கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ அவர்களுக்கு ஊக்கத்தொகை உண்டு.. அதாவது, அழைத்து வரும் நபர்களுக்கு ஏற்றார்போல், ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கிரைண்டர்கள்
அதுமட்டுமல்லாமல், அன்று நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அவர்களுக்கும் பரிசு உண்டு.. முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக கிரைண்டர், 3-ம் பரிசாக மிக்சி, 4-ம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்பட உள்ளது.

குலுக்கலில் சேர்ப்பு
25-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும்... முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்களின் தகவல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது... அவர்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறித்து தகவல்களை சேகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications