"இது தேவையில்லாத வாதம்.." 72 மணி நேரம் கெடு கொடுத்த அண்ணாமலை.. அமைச்சர் சிவசங்கரின் பொளேர் பதிலடி
கரூர்: தமிழக அரசு சிலிண்டர் விலையைக் குறைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்ற அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உயரத் தொடங்கியது.
இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், விலையைக் குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெட்ரோல் விலை குறைப்பு
இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்புகளைப் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் அண்ணாமலை தமிழக அரசைச் சாடியிருந்தார்.

அண்ணாமலை
தேர்தல் அறிக்கையில் கூறியபடி 72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதிப் படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாயும் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையில் கருத்திற்குத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் திமுக சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர்
அப்போது அண்ணாமலையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், "சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை. பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை மீட்டு பொதுமக்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அது என்ன ஆனது.

தேவையற்ற வாதம்
பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பாஜக ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இவற்றையெல்லாம் முழுமையாகக் குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற வாதம்" என்று என்று தெரிவித்தார்.

கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் விரைவில் போக்குவரத்து கட்டணம் உயர உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்த கேள்விக்குப் பேருந்து கட்டணம் உயராது என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்று பதில் அளித்தார். மேலும், தலைநகர் சென்னையில் முதல் கட்டமாக 500 மின்சார பேருந்துகள் மூலம் சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications