மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு வரலயா? “குட் நியூஸ்”.. பிரச்சாரக் களத்திலேயே உதயநிதி கொடுத்த உறுதி!
கரூர்: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்காதவர்கள் அனைவருக்கும் இன்னும் சில மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என பிரச்சாரக் களத்திலேயே உதயநிதி உறுதி கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாக கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

உதயநிதி பிரச்சாரம்: அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பெண்களுக்கு அனைத்து உரிமையையும் போராடி பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். பெண்களின் அனைத்து முன்னேற்றத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அண்ணா. அவர் வழியில் வந்த டாக்டர் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளித்தவர். நம்முடைய முதல்வர் பெண்கள் பள்ளிக்கூடம் படித்ததோடு மட்டுமல்லாமல் உயர் கல்வி படிப்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை அளித்தார்.
மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வங்கிகளில் வரவு வைக்கப்படுகிறது. 3 லட்சம் மாணவர்கள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்கிறவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பெற்றோர்களின் எண்ணம் அறிந்து வெறும் வயிற்றில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிற குழந்தைகளுக்கு முதலமைச்சர் தரமான காலை உணவு திட்டத்தை அளித்திருக்கிறார் நமது முதல்வர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக நமது மாநிலத்தில் தான் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 34,000 குழந்தைகள் இந்த திட்டத்தினால் பயன் பெறுகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது.
சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்." என்றார் உதயநிதி ஸ்டாலின்.
மோடியை தாக்கிய உதயநிதி: மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. நாம் வரியாக ஒரு ரூபாய் கட்டுகிறோம். அவர் மத்திய அரசு நமக்கு தருவது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால், அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.
10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் இன்னும் வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல் வைத்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்" எனப் பேசி வாக்குச் சேகரித்தார்.












Click it and Unblock the Notifications