"இந்த தீர்ப்பு ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அடி".. உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற வானதி சீனிவாசன்
கோவை: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்களுக்கு கூட சரியான நிதி உதவியை பயன்படுத்தாமல் இருப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் என பெண்ணுரிமை பேசும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதுமாக பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது. குடும்பத்தில் கூட ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் பெண்களுக்கு கொடுக்காதது தான் திராவிட மாடல் அரசாக பார்க்கிறோம். ஒவ்வொரு துறையிலும் இன்று திட்டங்களை அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பு, ஆனால் செயல்படுத்துகின்ற போது முற்றிலும் அதற்கு மாறாக நடந்து கொள்வது, தேர்தல் வாக்குறுதியில் ஒன்று கொடுப்பது, ஆனால் தேர்தல் நெருங்கும் போது வேறு ஒன்று பேசுவது, இடையில் தேர்தல் வாக்குறுதிகளுக்காக போராடக் கூடிய நபர்களைக் கூட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவது என மக்களுக்கு எதிரான அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது.
தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கியிருக்கிறார். இந்த பயணம் என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல போகிறது. திராவிட மாடல் அரசு ஏன் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது பற்றி மக்களுக்கு ஒவ்வொரு வீடுகளுக்கும் எடுத்து செல்கின்ற வகையில் இந்த பயணம் அமையும்.
தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில், பெண்களுக்கு விடுபட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப் போகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி சொல்லி இருக்கின்றார். இத்தனை ஆண்டுகளாக கொடுக்காமல் இருந்து விட்டு தேர்தல் வருகின்ற பொழுது கொடுக்கின்றனர். மக்களை ஏமாற்றுகின்ற டிராமா வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். மக்களும் இந்த அரசு போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
அதிமுக - பாஜக மற்றும் எங்களோடு இணைந்திருக்கின்ற அத்தனை கட்சிகளும் இந்த பிரச்சார பயணத்தை மக்களிடம் எடுத்து செல்கிறோம். வெற்றி என்பது 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். உச்ச நீதிமன்றம் கரூர் பிரச்சனைக்கு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம், நாங்களும் இதை எங்களின் கோரிக்கையாக வைத்திருந்தோம்.
கரூரில் நடந்ததை விபத்து என ஏற்றுக் கொள்ள முடியாது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசும்பொழுது நடந்ததாக கூறப்படும் பல்வேறு விஷயங்கள் மிகப்பெரிய சந்தேகத்தை மாநில அரசின் மீது உருவாக்கி இருக்கிறது. அரசாங்கத்தின் சார்பில் ஏற்படுத்தியிருக்கிற ஒரு நபர் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்பதை எங்கள் மாநில தலைவர் ஏற்கனவே கூறியிருந்தார். சிறப்பு விசாரணை குழுவை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கின்றார்கள்.
தமிழக காவல்துறை முழுவதுமாக தோல்வி அடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. தமிழக காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு அடியை கொடுத்து இருக்கிறது. தமிழக காவல்துறையின் மீதான நம்பிக்கை என்பது தமிழக மக்களுக்கு சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருக்கிறது. அவர்களுடைய முழு திறன் , முழு சுதந்திரம் என்பது இல்லை என்பது இந்த திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நூற்றுக்கணக்கான சம்பவங்களை சொல்ல முடியும்.
சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். சம்பவத்திற்கு காரணமானவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என்பது உண்மை. கரூர் ஒரு இறுக்கமான இடமாக நாங்கள் போகும்போது உணர முடிந்தது. அங்கு அரசியல் அதிகாரம் என்பதை தாண்டி அந்த மாவட்டத்திற்குள் மட்டும் உள்ளூரில் இருக்கக்கூடிய சாதாரணமான பஞ்சாயத்து தலைவர்கள் அல்லது வார்டு உறுப்பினர்கள் வேறு ஒரு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கடந்த நான்கு வருட காலத்தில் எத்தனை பேர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாறி இருக்கிறார்கள்.
மாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பார்க்க வேண்டும். ஒரு அறிக்கையையே உருவாக்க முடியும். எந்த அளவிற்கு ஆளும் கட்சி குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் பிடி, நெருக்குதல் தாங்க முடியாமல் எத்தனை பேர் கட்சி மாறி இருக்கிறார்கள் என்பதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும், இயல்பான சூழல் கரூரில் இல்லை. எந்த ஒரு சட்ட திட்டத்திற்கு உட்பட்ட மாவட்டமாக கரூர் இல்லை எனவும்,
திமுக ஆட்சி எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது ரௌடிகள் ராஜ்ஜியம் நடக்கும்.
ஆர் எஸ் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவை சிபிஐ என விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, உச்சநீதி மன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதில் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா, அவர் அதை பாலோ செய்யட்டும்.
சிபிஐ மூலமாக தவெக விஜயை பாஜக கன்ட்ரோலில் எடுக்கின்றதா என்ற கேள்விக்கு, இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து விரைவாக நீதி கிடைப்பதற்கு அவர் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. கரூர் விவகாரத்தில் உயிரிழந்த நபர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் பார்க்கிறோம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பது அரசியலாக பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கட்சிக்கொடி போட்டு விட்டோம் என்று சொன்னால் சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என யாரும் நினைக்க கூடாது. திருமாவளவன் விஷயத்தில் அவருடன் வந்தவர்கள், திருமாவளவன் ஆகியோர் உடல் மொழியும் ஒரு தலைவருக்குரியதாக இல்லை. ஒரு தனிநபரை இப்படித்தான் கையாளுவீர்களா. அந்த சம்பவம் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. ஒரு தனி நபரை இத்தனை பேர் சேர்ந்து மிரட்டுவது, சாதாரண செயலை அரசியலாக மாற்ற முயல்வது இந்த மனப்போக்கே ஆபத்தான மனப்போக்கு என்றார்.












Click it and Unblock the Notifications