கரூர் அருகே மாமியார் இறந்ததை கேட்டு மருமகனும்.. இறப்பை தாண்டி மகளை நொறுங்க வைத்த விஷயம்
கரூர்: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பாலசமுத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கன் என்பருடைய மனைவி மாரியாயி (வயது 73). இவர்கள் தங்களது மகளான சித்ரா (40) என்பவரை வடசேரி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் (47) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். சாலை சேற்றில் வழுக்கி விழுந்து காயம் அடைந்த மாரியாயி இறந்துவிட்டார். இதை கேள்விப்பட்டு அவரது மருமகன் சவுந்தர்ராஜனும் உயிரிழந்தார். மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகனும் இறந்தது கரூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பாலசமுத்திரப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் காலனியை சேர்ந்தவர் ரெங்கன், மாரியாயி தம்பதி. தங்களது மகளான சித்ரா (40) என்பவரை கரூர் மாவட்டம் வடசேரி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன் (47) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள் . சித்ரா சவுந்தரராஜன் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ரெங்கன் இறந்து விட்டார். இதனால் மாரியாயி தனது மகள் சித்ராவின் குடும்பத்துடன் எம்.ஜி.ஆர். நகர் காலனியில் தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பெய்த மழையினால் சாலையில் ஏற்பட்ட சேற்றில் மாரியாயி வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மாரியாயி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு அதிகமானது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலக்குறைவால் மாரியாயி காலமானார்.
இதுஒருபுறம் எனில், ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த சவுந்தர்ராஜனும், மாமியார் இறந்த அதிர்ச்சியில் நள்ளிரவில் இறந்து விட்டார். இதையடுத்து சித்ரா தனக்கு ஆதரவாக இருந்த தாயும், கணவரும் ஒரே நேரத்தில் இறந்ததை எண்ணி மிகவும் வேதனை அடைந்தார். வறுமையின் காரணமாக இறுதிச்சடங்கு செலவிற்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதை கேள்விப்பட்ட ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், உறவினர்கள் ஆகியோர் உதவி செய்தனர். அவர்களே மாரியாயி, சவுந்தர்ராஜன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து அடக்கம் செய்தனர். ஒரே குடும்பத்தில் மாமியார், மருமகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கரூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications