விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை? செந்தில் பாலாஜி சொன்ன பதில்! ஆஹா நோட் பண்ணுங்க
கரூர்: தமிழ்நாடு அரசு சார்பில் இப்போது பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பெண்கள் பலரும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதில்லை எனப் புகாரளிக்கிறார்கள். இதற்கிடையே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா.. இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தொடர்பாக செந்தில் பாலாஜி சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகை பெண்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2021 தேர்தலின்போது திமுக இதை வாக்குறுதியாகவே அளித்திருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நேரடியாகவே தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 மாதாமாதம் வரவு வைக்கப்படும்.

செந்தில் பாலாஜி
இருப்பினும், பெண்கள் பலரும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனத் தொடர்ந்து புகாரளித்து வருகிறார்கள். தமிழக அரசு சார்பில் இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் சூழலில், அதில் உரிமைத் தொகை தொடர்பாகவே பல்வேறு மனுக்கள் வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா என்பது குறித்து செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "மின் இணைப்புகளில் பெயர் மாற்றம், சொத்து வரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளோடு வருவோருக்கு அந்தந்த முகாம்களிடையே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. சில கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுவோருக்கு மட்டும், அதைக் கேட்டு வாங்கி நடவடிக்கை எடுக்கிறோம். அவை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
உரிமை தொகை
குறிப்பாக உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படுகிறது. அந்தத் துறை ஆய்வு செய்து, விசாரணையை முடித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஒரு மனுவை கூட புறக்கணிக்காமல் பொதுமக்கள் தரும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரூரில் இதுவரை 86,000 மனுக்கள் வந்துள்ளன. அதில் சுமார் 30,000 மனுக்கள் உரிமைத் தொகை கேட்டே வந்துள்ளது. மனுக்கள் வர வரச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அனைவருக்கும் கிடைக்குமா?
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்று கேள்வி செந்தில் பாலாஜி, "மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும். அதன் பிறகே மனுக்களைப் பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2021ல் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதலே கரூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமும் ஏற்படாத வகையில், மக்கள் இருக்கும் இடத்திற்கே அரசு அதிகாரிகள் சென்று, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்கள்.
மக்களிடம் மனுக்களைப் பெற்று, அதை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். விசாரணை முடிந்து அதே இடத்தில் தீர்வும் வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்குத் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாகப் பல வளர்ச்சித் திட்டங்கள் நடந்து வருகிறது. சிப்காட் தொடங்கி எல்லா விஷயங்களிலும் அரசு பக்க பலமாக இருக்கிறது" என்றார்.
உறுதி கொடுத்த உதயநிதி
முன்னதாக உரிமைத் தொகை தொடர்பாகத் துணை முதல்வர் உதயநிதியும் சில முக்கிய விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதாவது கலைஞர் உரிமைத்தொகை திட்டம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் ஒன்றிரண்டு மாதங்களில் அவர்களுக்குக் கண்டிப்பாகப் பணம் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், இதில் உள்ள விதிகளிலும் சில தளர்வுகளும் கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications