வாக்குச்சாவடியில் விசில் ஊதிய போலீஸ்காரர்.. கரூரில் முன்னாள் எம்.எல்.ஏ வாக்குவாதம்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடியில், ஹோம் கார்டு ஒருவர் விசில் ஊதிக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த முன்னாள் எம்எல்ஏ, காவலரிகளிடம் சென்று, 'இது அரசியல் கட்சி சின்னம். இதை பயன்படுத்தக்கூடாது' என வலியுறுத்தினார். இதனால், காவலர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

பகல் ஒரு மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பகல் ஒரு மணிக்கு 39.61 சதவிகித வாக்குகளே பதிவாகி இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதைவிட கூடுதலாக 17.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், காவலர்கள் பயன்படுத்தும் விசிலை பயன்படுத்தி வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திமுகவைச் சார்ந்த முன்னாள் எம்எல்ஏவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவுக்கு திமுக சீப் ஏஜென்டுமான காமராஜ் அந்த இடத்தில் காவலர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
“விசில் ஒரு கட்சியின் சின்னம். வாக்குச்சாவடியில் அதனை பயன்படுத்தக்கூடாது அதனை உடனே அகற்ற வேண்டும்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடன் பணியாற்றிய காவலர் விசிலை எடுத்து விடுங்கள் எனக் கூறிய நிலையில் அங்கிருந்த திமுகவினர் கிளம்பிச் சென்றனர்.
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக சி.கே.ராஜா, அதிமுக வேட்பாளராக திவ்யா, தவெக சார்பில் மதன், நாதக சார்பில் சத்யா ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், தவெக சின்னம் பயன்படுத்தியதாக வாக்குச்சாவடியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications