“ரூம் போடுறேன் வரியானு கேக்குறான்.. பொண்ணுங்க தனியா வரவே முடியாதா?” கரூர் பஸ் ஸ்டாண்டில் பெண் ஆவேசம்
கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம், தகாத முறையில் ஒரு நபர் பேசியதால் அப்பெண், பொது இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆவேசமடைந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி. சுமார் 50 வயதான இவர் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து திரும்பும்போது கரூர் பேருந்து நிலையம் வந்து சேலம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது போதையில் அங்கு வந்த ஆசாமி ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி சுமதியை அழைத்துள்ளார். மேலும், அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த சுமதி, அந்த போதை ஆசாமியை எட்டி உதைத்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்த சுமதி, அவசர அழைப்பு எண் 100ஐ அழைத்துள்ளார். இணைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், அப்பகுதியில் போலீஸ் வாகனம் இருந்தும் போலீசார் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், போலீசார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார் சுமதி.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போலீசார் அங்கு வந்துள்ளனர். இதையடுத்து போலீசாரிடம் அப்பெண் முறையிட்டார். பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இவ்வளவுதானா? குடித்துவிட்டு மோசமான முறையில் யாரும் நடந்து கொண்டால் கூட கேட்க ஆளில்லையா என ஆவேசமாக முறையிட்டார்.
பேருந்து நிலையத்தில் ஒரு பெண் தனியாக வரவே முடியாதா? குடிகாரன் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? அதற்குத்தான் சுற்றிலும் டாஸ்மாக் கடை வைத்திருக்கிறீர்களா? உங்க வருமானத்துக்காக எங்களை சாகடிப்பீர்களா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ரூம் போடுறேன் வரியான்னு கேட்குறான். ஒருத்தர் கூட அவனை தட்டிக் கேட்கவில்லை. புகார் சொல்லக்கூட இங்கு ஒரு போலீஸ் இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? என சரமாரியாக கேள்வி எழுப்பினார் சுமதி. போதை நபர் தகாத முறையில் நடந்துகொண்டதால் ஆத்திரமடைந்த பெண், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications