ரூ.100 கோடி நில மோசடி.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது
கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட இருவரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா என்பவருக்கு 22 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்திருக்கிறது. இந்த நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்து விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், பல முக்கிய நபர்கள் சிக்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் என பல முக்கிய புள்ளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

இதனையடுத்து இவர்களை கடந்த ஜூலை மாதம் அதிரடியாக கைது செய்தது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீன், இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினர். இவர்களுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும், யுவராஜ் என்பவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், யுவராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தெரிவித்திருக்கிறது. யுவராஜை, கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications