கிருஷ்ணகிரி சிறுவன் வாயில் பீரை ஊற்றிய இளைஞர்! 50 அடி பள்ளத்தில் வீசிய கொடூரம்! விசாரணையில் பகீர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரில் ஒரு இளைஞர் தனது காதலியுடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், வெளியே சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவனைக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ்-மஞ்சு தம்பதியின் இளைய மகன் ரோகித். 13 வயதாகும் இவன் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தான்.

சம்பவத்தன்று ரோகித் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித், அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போனான்.
அவனது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் முந்தைய நாள் இரவு புகார் அளிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு காவலர், "உன் மகன் என்ன கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளையா, பணம் கேட்டு கடத்துவதற்கு? எங்கேயாவது விளையாடப் போயிருப்பான், வந்துவிடுவான் போ" என விரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பெண் ஆய்வாளர் ஒருவரிடம் சென்று தங்கள் மகன் காணவில்லை எனக் கூறி, மகனை கண்ணில் காட்டுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர், "உன் மகனை நானா வைத்திருக்கிறேன், நீ கேட்டதும் கண்ணில் காட்டுவதற்கு?" என அலட்சியமாக கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அஞ்செட்டி கிராம மக்களைத் திரட்டி சிறுவனின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காவல் துறை உயரதிகாரியும், "யாருக்கும் பிரச்னை செய்யாமல் கலைந்து போகுமாறு" கூறியுள்ளார். அதற்கு அவர்கள், "பிள்ளையை கண்ணில் காட்டிவிடுங்கள்" எனச் சொன்னதற்கு, அவரும் அலட்சியமாகவே பதில் சொன்னதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களைப் பொதுமக்களே ஆய்வு செய்தபோது, சிறுவனை யாரோ இருவர் அழைத்துச் சென்று காரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. அந்தக் கார் எங்கு சென்றது என அறிய முற்பட்டபோது, அந்தக் கார் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்தது தெரியவந்தது.
பின்னர் போராட்டம் நடத்திய மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, முந்தைய நாள் இரவு 8 மணியளவில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது.
சிறுவனின் உடல் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இருந்தது தெரியவந்தது. கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அந்தச் சிறுவனின் உடல் வீசப்பட்டிருப்பதைக் கண்டு பெற்றோர் கதறினர். பொதுமக்களே சென்று அந்தச் சிறுவனின் சடலத்தை மீட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த இருவரிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்ததை கொலையுண்ட சிறுவன் பார்த்துவிட்டாராம். இதனால் அவன் வெளியே சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் சிறுவனுக்கு வாயில் பீர் ஊற்றி மயக்கமடையச் செய்து, 50 அடி ஆழத்தில் இருந்து சிறுவனைத் தள்ளியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். தாங்கள் புகார் கொடுத்தபோதே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் தங்கள் மகன் உயிருடன் இருந்திருப்பானே என பெற்றோர் கதறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications