அரைமணி நேர ஆலங்கட்டி மழை... வெள்ளக்காடான ஓசூர்! முழங்கால் வரை தேங்கிய மழை நீரால் தத்தளித்த மக்கள்
கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சியில் அரைமணி நேர மழைக்கே முக்கிய சாலைகள், பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவு மழை வெள்ளம் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
Recommended Video
ஒசூரில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் கருணாநிதி தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியின் போது அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது
மாநில எல்லையில் உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருவதால் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
சுட்டெரித்த சூரியனுக்கு மத்தியில் சுகம் தந்த மழை... இப்டியே இருந்தா நல்லாருக்கும்ல?
அரைமணி நேர ஆலங்கட்டி மழை
இந்த நிலையில், ஒசூரில் இன்று அரைமணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது. கொட்டித் தீர்ந்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையத்தின் அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக உள்ள சாலை, தாழ்வாக அமைக்கப்பட்டு இருப்பதால் அரை மணி நேர மழைக்கே அப்பகுதி குளம் போல காட்சியளித்தது
முழங்கால் வரை வெள்ளம்
இதனால் பணிக்கு சென்று மாலை நேரம் வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் சாலைகளில் நகர முடியாமல் முடியாமல் தத்தளித்தனர். பெண்கள், நடந்து செல்வோர் முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் முகம் சுழித்தவாறு சிரமத்துடன் நடந்து சென்றனர். முக்கிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டி, சாலையோர கடைகளுக்கு உள்ளேயும் வெள்ளநீர் புகுந்தது.
மக்கள் கோரிக்கை
14 ஆண்டுகளாக லேசான மழைக்கே குளம்போல் இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துவிடுவதாகவும் இதனால் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக பேருந்து நிலையத்தை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின், முதல்வராக தாழ்வான சாலைகளை சரிசெய்து, பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
கோடையை வென்ற மழை
கோடை வெப்பம் காரணமாக பொது மக்கள், வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பினரும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளான சூழலில்தான் ஓசூரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கின்றனர்.