76 சென்ட் நிலம், அசல் பத்திரம்.. கிருஷ்ணகிரி அம்சா இம்சை.. கலெக்டர் ஆபீசில் யாரிந்த 102 வயது பாட்டி
கிருஷ்ணகிரி: 102 வயது பாட்டி, கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீசுக்கு வந்ததை பார்த்ததுமே பலரும் வியப்புடன் பார்த்தனர்.. தன்னுடைய சொந்த மகள் மீது உரிய விசாரணை கோரி, புகார் மனுவுடன் இந்த பாட்டி வந்திருந்தார்.. அப்படி என்ன நடந்தது கிருஷ்ணகிரியில்?
பல்வேறு குடும்ப சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, தங்களது வாரிசுகளுக்கு சொத்தை எழுதி வைத்துவிடுகிறார்கள். ஆனால், ஒருகாலகட்டத்துக்கு பிறகு தாய்-தகப்பனை வாரிசுகள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் ஆளாகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படி, சில நாட்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
பராமரிப்பு: அதில், "மூத்த குடிமக்களின் உணர்வுகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலைக்குரியதாகும். இதுபோன்ற சூழலில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்கலாம்..
சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும்.. தவறினால், சொத்துகளை எழுதிகொடுத்தது செல்லாது என்று அறிவிக்கமுடியும்" என்று வழக்கு ஒன்றில் தீர்ப்பு தந்திருந்தனர். சொத்துக்கள் மொத்தத்தையும் பிள்ளைகளுக்கு எழுதிவிட்டு, நடுத்தெருவில் கதிகலங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
துயரங்கள்: ஆனாலும், நம்ம ஊரில் இன்னும் இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரம், கள்ளக்குறிச்சியில், 84 வயதுடைய லட்சுமணன் என்பவரை, அவரது மூத்த மகன், சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று, தந்தையின் பெயரில் இருந்த 1 ஏக்கர் 64 சென்ட் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு, அவரை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.
இதனால், தங்குவதற்கு இடமின்றி தவித்துவரும் லட்சுமணன், ஊர் முக்கியஸ்தர்களின் உதவியோடு திருக்கோவிலூர் சார் ஆட்சியரை சந்தித்து, தன்னுடைய மகன் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணீர் விட்டு கேட்டு மனு தந்துவிட்டு போனார்.
3 சென்ட் நிலம்: இதோ கிருஷ்ணகிரியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. இந்தம்மாவுக்கு 102 வயதாகிறது.. பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்த இந்த மூதாட்டியின் பெயர் ராஜம்மாள்.. தன் மகன் கிருஷ்ணன் என்பவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை தந்துள்ளார்.. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"என் கணவர் முருகன், பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு, 5 மகள்கள், 3 மகன்கள். தந்தை வழி சொத்தாக எனக்கு, 1.28 ஏக்கர் நிலம் சிகரலப்பள்ளியில் உள்ளது. இதில், இளைய மகள் அம்சா, வீடு கட்ட, 3 சென்ட் நிலம் கேட்டார். கடந்த 1986ல் அந்த நிலத்தை தர நான் சம்மதித்தேன். ஆனால் அவர், எனக்கு தெரியாமல், 3 சென்ட்டுக்கு பதில் 27 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி விட்டார். மேலும், 49 சென்ட் நிலத்தையும் அபகரித்து விட்டார். என் சொத்தின் அசல் பத்திரத்தையும் பறித்து கொண்டார்.
சொத்துக்கள்: இப்போது, என் சொத்துக்களை அனைத்து பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்க, பர்கூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோது தான், என் இளைய மகள் அம்சா, அவரது கணவர் அருணாச்சலம் ஆகியோர், என்னை ஏமாற்றி நிலங்களை அபகரித்தது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்து என்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுத்தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தமனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications