விவாகரத்தான பெண்ணை கொலை செய்த இளைஞர்.. வேறு ஆணுடன் போனில் பேசியதால் ஆத்திரம்.. கிருஷ்ணகிரியில் பரபர!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கடையில் வேலை பார்க்கும் பெண்ணை வயிறி, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்திய இளைஞர் போலீஸில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கருக்கஞ்சாவடியை சேர்ந்தவர் செல்வி (32). இவரது கணவர் முனியப்பன். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்நிலையில் செல்வி தனது 14 மற்றும் 10 வயதில் உள்ள இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். குழந்தைகளை காப்பாற்றுவதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கடையில் செல்வி வேலைக்கு சென்று வந்தார்.
2017-ஆம் ஆண்டு முதல்
அப்போது அதே பகுதியில் ஜவுளிகடையில் பணியாற்றும் தௌலத்துடன் (30) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் வந்துள்ளார்.
தப்பி ஓட்டம்
அப்போது கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் செல்வியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிஓடிவிட்டார். பின்னர் உயிருக்கு போராடிய செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்பதற்குள் அவர் உயிரிழந்தார்.
பணத் தேவைகளுக்கு
பின்னர் தப்பியோடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தௌலத் வாக்குமூலத்தில் கூறுகையில், நான் அவ்வப்போது செல்வியின் பணத் தேவைகளுக்கு உதவுவதுண்டு.
வேறு ஆணுடன் போனில் அரட்டை
ஒரு நாள் தனக்கு அவசரமாக ரூ. 2000 தேவைப்படுகிறது என செல்வி கேட்டார். இதனால் நேற்று நான் பணத்துடன் அவர் பணியாற்றும் கடைக்கு சென்றேன். அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
கொலை
இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. அதை தட்டி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினேன் என்று தௌலத் வாக்குமூலம் அளித்தார்.