அமித்ஷாவுக்கு எதிர்ப்பு.. புதுச்சேரியில் விரைவில் திமுக கூட்டணி ஆட்சி - கி.வீரமணி ஆருடம்
கிருஷ்ணகிரி: தமிழகத்தை போல புதுச்சேரி மக்களும் உண்மையை புரிந்துக்கொண்டு இருப்பதால் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும், அங்கு விரைவில் திமுக கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் எனவும் கி.வீரமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராம்நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் ஒழிப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று உறையாற்றினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, நீட் ஒழிப்பு, மாநில உரிமைகள் மீட்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளும் விதமாக மீட்பு பயணம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது என்றார். ஏப்ரல் 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பயணத்தை வரவேற்று நிறைவு செய்து வைக்க இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் என்னும் கொடு வாள் தொங்கிக்கொண்டிருக்கிறது, பிள்ளைகளின் மருத்துவ கனவை சிதைக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே பரப்புரை பயணத்தை நாம் மேற்கொண்டு வருகிறோம். கட்சி, சாதி வேறுபாடுகளின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு இருப்பதால் களைப்பின்றி காணப்படுகிறோம்.
மீண்டும் மீண்டும் பிடிவாதம் பிடித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க நினைத்தால் ஏமாந்து போவார்கள் என்றார். புதுச்சேரியில் ஏப்ரல் 24 அன்று அமித்ஷா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜக கூட்டணியில் N.R.காங்கிரஸ் என்னும் பொம்மலாட்ட அரசு செயல்பட்டு வருகிறது.
அவர்களை மெதுவாக இறக்கி காவி சாயம் தடவ முயல்கின்றனர். இதனை மக்கள் புரிந்துகொண்டு விட்டதால்தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி அங்கேயும் காணப்படுகிறது, விரைவில் திமுக தலைமையிலான கூட்டணி அரசு புதுச்சேரியிலும் ஆட்சியமைக்கும் என்றார்.