கிருஷ்ணகிரி மக்களின் நீண்டகால கனவு - நிறைவேற்றிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: ஒருதோட்டக் கலைக் கல்லூரியைக் கிருஷ்ணகிரியில் கொண்டுவர வேண்டும் என்பது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பல ஆண்டுக்கால கனவு. அந்தக் கனவை தற்போது நிறைவேற்றித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கிருஷ்ணகிரி ஒரு வேளாண்மை சார்ந்த மாவட்டம். கிட்டத்தட்ட உணவு பயிரான நெல், 25700 ஹெக்டரில் பயிரிடப்படுகிறது. 1.53 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த வட்டாரத்தில் பிரதானமாக நெல், கேழ்வரகு, துவரை, கொள்ளு, நிலக்கடலை, மா மற்றும் தென்னை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆகவே அதிக விவசாயிகள் நிறைந்த பகுதியாக இது இருந்து வருகிறது.
ஏழை எளிய எழுத்தாளனுக்கு சர்வதேச அங்கீகாரம்! - ஸ்டாலின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி
ஏற்றுமதிக்குக் கிடைக்கும் நல்லவாய்ப்பு:
ஆகவே இந்தப் பகுதியில் ஒரு வேளாண் தோட்டக்கலைக் கல்லூரியும் ஆராய்ச்சிக் கூடமும் தேவை என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை உணர்ந்துதான் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கல்லூரி கனவுக்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், "தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஏறக் குறைய தத்து எடுத்துக் கொண்டார் என்று தான் சொல்லவேண்டும். இந்த ஆட்சி அமைந்த உடனேயே வேளாண்துறை அமைச்சருக்கு, 'தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்' அமைக்கவேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டார். அவரது உத்தரவு செயல் வடிவம் தரும் வகையில் வேளாண் துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது".
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
அதனையடுத்து உடனடியாக கல்லூரியும் தொடங்கப்பட்டது. மாணவர்கள் சேர்க்கையும் முடிந்து தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது. காய்களில் கத்திரிக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் தான் எங்கள் பகுதியில் அதிகமாகச் சாகுபடி செய்கிறார்கள். அதேமாதிரி பூவகைகளில் ரோஜா, சாமந்தி, மல்லி எனப் பல பயிர் செய்யப்படுகின்றன. அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகிறது. ஆனால் இந்தத் தோட்டப்பயிர்கள் அடிக்கடி நோய்த் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. ஏன் இந்தப் பூச்சித் தாக்குதல் வருகின்றன. அவற்றைத் தடுக்க என்ன மாதிரியான வழிகள் உள்ளன என ஆராய்கிறார்கள்.
200 ஏக்கர் பரப்பளவில் ஜீனூர் பண்ணை:
இந்த ஜீனூர் பண்ணையானது 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நேரடியாகப் பயிர் சாகுபடி செய்ய கற்கிறார்கள். மேலும் நோய்த் தாக்குதல் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். அவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை இன்றைக்குக் களத்தில் உள்ள விவசாயிகளோடு பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் இந்த மண் வளத்திற்கு ஏற்ப என்ன பயிர்களைக் கூடுதலாகப் பயிரிடலாம். இப்படி பல வற்றையும் கண்டறிய எங்கள் பகுதிக்கு ஒரு வேளாண் தோட்டக்கல்லூரி தேவையாக இருந்தது. அந்தத் தேவையை முதல்வர் ஸ்டாலின்உணர்ந்து நிறைவேற்றித் தந்துள்ளார்." என்று மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார்.
புதிய கல்லூரியால் மாணவர்கள் மகிழ்ச்சி:
"அரசியல் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில் எந்தளவுக்கு ஈடுபடுகிறார்களோ அந்தளவுக்கு நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பது ஒரு அறிவியல் உண்மை. ஆகவேதான் நாங்கள் வேளாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும் தோட்டக்கலைக் கல்லூரியில் இணைந்து படிப்பை மேற்கொண்டிருக்கிறோம்" என்கிறார் கோகுல்ராஜ் என்ற மாணவர்.
"இந்தியாவின் முதுகெலும்பு வேளாண்மைதான். அந்த வேளாண்மையின் ஒரு பிரிவுதான் தோட்டக்கலை. எக்ஸ்போர்ட் சார்ந்து துறையில் இந்தத் தோட்டக்கலைக்கு நல்லவாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், எக்ஸ்போர்ட் சாந்து வெளிநாடுகளுக்குச்செல்லும் நிறையைப் பொருட்கள் தோட்டக்கலை சார்ந்தவை. பழங்கள், காய்கறிகள் நிறைய இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிறது. மசாலா சார்ந்து மிளகு, சீரகம், பட்டை, இலவங்கம், ஏலக்காய் எனப் பல ஏற்றுமதி ஆகின்றன. உலக அளவில் இந்தியாவிலிருந்து நிறைய பூவகைகள் ஏற்றுமதி ஆகின்றன. ஆகவே நல்ல எதிர்காலம் உள்ள படிப்பாக இந்தத் துறை இருக்கிறது" என்கிறார் இங்குப் பயின்று வரும் காதர் நவாஸ்
"இன்றைய சமூகம் பிசினஸ் மைண்ட் உள்ள சமூகமாக இருக்கிறது. ஆகவேதான் இன்றைக்கு நான் தோட்டக்கலை சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இதனால் நான் ஒரு சுயமாகத் தொழிலிலும் ஈடுபடமுடியும். அதேசமயம் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்துச் செல்லவும் முடியும். ஆகவே இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்" என்கிறார் ரஞ்சனாராஜா.
ஜானகி என்ற மாணவி விழுப்புரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்து படிக்கிறார். அவரது பெற்றோர்கள் பூர்வீகமாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே, அதனை விஞ்ஞான பூர்வமாகப் படிக்க வேண்டி இவர் இவ்வளவு தூரம் பயணித்துப் படிக்க வந்துள்ளார்.
தனி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது
கல்லூரியைச்சார்ந்த பேராசிரியர் ஜீவஜோதி, "கிருஷ்ணகிரி வேளாண்கல்லூரிக்கு அருகிலேயே இந்தத் தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரி அமைந்திருக்கிறது. விரைவில் இதற்குத் தேவையான தனி கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் நேரடியாக வந்து பார்வையிட்டு இடத்தையும் உறுதி செய்து கொடுத்துள்ளார். நமது நாட்டில் 80% விவசாயிகள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான தொழில் நுட்பவசதிகள் சரியாகப் போய்ச்சேரவேண்டும். அதேபோல அறிவியல் சார்ந்த அறிவும்அவர்களுக்குக் கிடைக்கப் பெற வேண்டும்.
தேவையை உணர்ந்து செய்துகொடுத்துள்ளார்
எங்கள் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்கள் விவசாய குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் படிப்பின் மூலம் முறையான தொழில்நுட்பம் போய்ச் சேர்ந்தால், அது அப்படியே அவர்களைச் சார்ந்துள்ள விவசாயிகளுக்குப் பயன் உள்ளதாக மாறும். ஆகவே இந்தப் பகுதிக்கு இதைப் போன்ற கல்லூரியின் தேவை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து செய்து கொடுத்துள்ளார்.
40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி:
எங்கள் பகுதியில் 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மா விவசாயிகள் அனைவரும் லாபகரமாக விவசாயம் செய்து வருகிறார்களா? என்றால் கட்டாயம் இல்லை. மா விவசாயத்தில் பல பேர் நஷ்டத்தை அடைகிறார்கள். காரணம் பூச்சித்தாக்குதல். மற்றும் மண்சார்ந்த பிரச்சினைகள். ஆகவே,எங்கள் கல்லூரி மூலம் மா விவசாயிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான சாகுபடியை நாங்கள் கற்பித்து வருகிறோம்"என்கிறார்.