முதல்வர் ஸ்டாலினை மக்கள் நம்பறாங்க.. செல்வாக்கு உள்ளது போல் பாஜக படம் காட்டுகிறது..முத்தரசன் அட்டாக்
முதல்வர் ஸ்டாலினுக்கு இரா.முத்தரசன் பாராட்டு தெரிவித்துள்ளார்
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது.. உபியில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன்? என்று மூத்த தலைவர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து திமுக அரசை முத்தரசன் பாராட்டி உள்ளார்.
கிருஷ்ணகிரி பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாற்று கட்சியிலிருந்து இணையும் விழா மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது...
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலையில் அதிமுக விடுதலை சிறுத்தைகள் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சியிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

முத்தரசன்
இதையடுத்து, இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: "உத்தரபிரதேசம் மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் அந்த மாநில அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை.. இதனால் சுப்ரீம் கோர்ட் இவ்வழக்கை முன்னெடுத்து நடத்தியதில் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், உடனடியாக இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்படவில்லை.

கைது
மறுபடியும் அதே சுப்ரீம் கோர்ட் தலையீட்டின்படி உபி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சர் மகனை விசாரணைக்கு அழைத்து, கிட்டத்தட்ட 11 மணி நேர விசாரணைக்குப் பிறகே அவரை கைது செய்தனர்... இந்த சம்பவத்தின்போது மத்திய உள்துறை இணையமைச்சர், "நானோ அல்லது எனது மகனோ அங்கு இருப்பது உறுதி செய்தால் அதற்கு பொறுப்பேற்று எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்" என்று அறிவித்தார்.

மவுனம்
இப்போது, அமைச்சரின் மகன் அங்கு இருந்தது அவரது செல்போன் மூலம் உறுதி செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார். அப்படியென்றால், ஏன் மத்திய உள்துறை இணை அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவில்லை? பிரதமர் ஏன் மத்திய இணை அமைச்சரை இன்னும் டிஸ்மிஸ் செய்யவில்லை? நடந்து இன்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், பாரத பிரதமர் இதுவரையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது சம்பவத்தில் தூண்டிய நபர்களுக்கு ஒரு கண்டனமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது ஏன்?

போராட்டங்கள்
உத்தரபிரதேச சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்டஅனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் கண்டிக்காமல் இருப்பது, இதனை ஆதரித்து, ஊக்குவிப்பதை போல உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்ததற்காக வருந்துகிறேன்.. நாட்டு மக்களிடம் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அதுமட்டுமல்ல, தன்னுடைய அரசு நிறைவேற்றியிருக்கிற 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால்தான் நாட்டில் அமைதி ஏற்படும்.. இல்லையென்றால் நிச்சயமாக ஒருபோதும் அமைதி ஏற்படாது.. சட்டங்களை திரும்ப பெறுகிற வரையில் போராட்டங்கள் தொடரும்..

அமைச்சரின் வருகை
ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தியாகிவிட்டது.. இன்னும் மேலும் மேலும் அது ஜனநாயக முறையில் தீவிரம் அடையும்.. அப்படி தீவிரம் அடைகிறபோது, அதனால் ஏற்படுகிற விளைவுகளுக்கு நாட்டின் பிரதமர் மோடி முழு பொறுப்பேற்க வேண்டும். உபி மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் ஒரு அமைச்சரின் வருகையை யாரும் எதிர்க்கவில்லை.. வரக்கூடாது என்று விவசாயிகள் போராடவில்லை.. மாறாக, தங்கள் அதிருப்தியை எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்..

கருப்பு கொடி
கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை காட்ட கூடியிருந்தார்கள்.. கருப்பு கொடியை காட்டி, அமைச்சரை திரும்பி போ என்று சொல்லக்கூடிய உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது.. அனுமதித்திருக்கிறது.. நேருவுக்கு கருப்பு கொடி காட்டியிருக்கிறோம்.. "திரும்பி போ" என்ற போராட்டம் அன்று தமிழ்நாட்டில் நடந்துள்ளது. பாஜக அரசு நிறைவேற்றிய புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்கள், மின் திருத்த சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரமடையும்..

சமையல் கேஸ்
தீபாவளி நெருங்கும் நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு மூன்று ரூபாய் பெட்ரோல் விலையை குறைத்தால் மத்திய அரசு 40 ரூபாய் பெட்ரோல் விலையை உயர்த்துகிறது. சமையல் கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும்... ஜிஎஸ்டி முறையை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. சமீப காலமாகவே, தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக ஒருவித மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது.

திமுக
முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றவுடன் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, மக்களின் துயர்துடைக்க கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். 14 மளிகை பொருட்கள் இலவசம், பஸ்களில் மகளிருக்கு இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை மிக சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். இதன் வெளிப்பாடே திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அடிப்படையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்... அதனையும் தற்போது உணர முடிகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications