கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க போவதாக சமூக வலைதளங்களில் அவதூறு.. இந்து முன்னணி மாவட்ட தலைவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவராக உள்ள கலைகோபி என்பவரை போலீசார் கைது செய்துள்ளார். கிருஷ்ணகிரி 5 ரோடு பழைய சப்-ஜெயில் ரோட்டில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த நவநீத வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை இடிக்க போவதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரில் கைதாகி உள்ளார்.
கிருஷ்ணகிரியில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயில், புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணருக்குரிய ஒரு பழமையான ஆலயமாகும். இது கிருஷ்ணகிரி நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது. மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்றவற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலில், கருவறையில் உள்ள கிருஷ்ணர் குழந்தை வடிவத்தில், வலது கையில் வெண்ணெய் உருண்டையுடனும், இடது கையில் மத்தங்களுடனும் நின்ற கோலத்திலும் இருக்கிறது. இந்த கோயிலை மையமாக வைத்தே கிருஷ்ணகிரி நகரம் அமைந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருப்பவர் கலைகோபி (வயது 47). இவர் முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலை பதிவிட்டார். 'கிருஷ்ணகிரி ஐந்து ரோடு, சேலம் சாலையில் உள்ள, 800 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணன் சாமி தெருவில் இருக்கும் ஸ்ரீநவநீத வேணுகோபால சுவாமி கோவிலை, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் இடிக்க திட்டம் தீட்டி வருகின்றனர்.'தடுக்காவிட்டால் நம் சுவாமியை திருடி விடுவர். வாருங்கள் சொந்தங்களே, நம் முன்னோர் கட்டிய ஆலயத்தை காப்பாற்றுவோம்' இவ்வாறு பதிவிட்டு இருந்தார். இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சமூக ஊடக பிரிவுகளை கண்காணிக்கும் பெண் போலீஸ் செல்வி என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறி இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலை கோபியை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி ஸ்ரீநவநீத வேணுகோபால சுவாமி கோவில் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என, அறநிலையத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலை கோபி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications