கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை.. திமுக கவுன்சிலர் கைது.. நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சின்டெக்ஸ் டேங்கில் துணி வைத்ததில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சின்டெக்ஸ் டேங்கில் துணி வைத்ததில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பிரபு வயது 28. இவர் ராணுவ வீரர் ஆவார். இவரது அண்ணன் பிரபாகரன் வயது 33 இவரும் ராணுவ வீரராக உள்ளார்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபுவின் மனைவி பிரியா துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று ஆத்திரத்துடன் கேட்டிருக்கிறார்.

வாக்குவாதம்
இந்நிலையில் கவுன்சிலர் சின்னசாமி சத்தம் போட்டதை பார்த்து அருகே வந்த பிரபு ஏன் என்று கேட்டாராம். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோபத்தில் இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை 10க்கும் மேற்பட்டோருடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு ஆகியோருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். அப்போது வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளதாம்.

படுகாயம்
இந்நிலையில் சின்னசாமி மற்றும் அவருடன் ராஜாபாண்டி, பூபதி, கருணாநிதி, குருசூரியமூர்த்தி, வேடியப்பன் ஆகியோர் சேர்ந்து ராணுவ வீரர்கள் பிரபு, பிரபாகரன், பிரியா உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கினார்களாம். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் மோசமாக படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

வழக்கு பதிவு
இந்நிலையில் தங்களை திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக பிரபுவின் மனைவி பிரியா நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, கவுன்சிலரின் மகன்களான ராஜபாண்டி, 30, சென்னையில் போலீசாக பணிபுரியும் குருசூரியமூர்த்தி, 27, குணநிதி, 19, அவர்களின் உறவினர்களான மணிகண்டன், 32, மாதையன், 60, வேடியப்பன், 55, உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

கவுன்சிலர் கைது
ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பிரபு, செவ்வாய்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து நாகரசம்பட்டி போலீசார், கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications