10 நாள் மட்டும் பொறுங்க.. திமுக கூட்டணியில் எத்தனை கட்சினு தெரியும்.. ‘சஸ்பென்ஸ்’ வைத்த எடப்பாடி!
கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி உள்ளது. அடுத்த 10 நாட்களில் திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளன என்பது தெரியவரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மார்ச் மாதத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. லோக்சபா தேர்தலையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பாஜக கூட்டணி உறுதியாக இல்லை: திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. மீண்டும் அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி, அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை இழுப்பதில் பாஜக, அதிமுக இடையே பெரும் போட்டியே நடப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பாஜகவுடன் அதிமுக கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கூறிவிட்டேன். அ.தி.மு.க. முன்னனி தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். கடந்த 2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
அதன்பிறகும் கடந்த 5 மாத காலமாக மற்ற எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறோம் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை, இல்லை, இல்லை. அதே நேரம் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று சொல்கிறார்கள். எந்த நேரத்தில் அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில், சரியான நேரத்தில் கூட்டணி அமைப்போம்.
10 நாள் மட்டும் பொறுங்க: திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி உள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க தி.மு.க மறுக்கிறது. அடுத்த 10 நாட்களில் திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் உள்ளன, எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது தெரியவரும்" எனக் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இரண்டாம் கட்டமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இப்படியான சூழலில், எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி பற்றி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications