2 பெண்களுக்கு கொரோனா.. பச்சை மண்டலம் அந்தஸ்தை இழந்தது கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி: பசுமை மண்டலத்தில் இருந்த தமிழகத்தின் ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரி, தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புட்டபர்த்தியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த முதியவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் சேலம் சோதனை சாவடியில் தடுக்கப்பட்டு, சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். எனவே, அது கிருஷ்ணகிரி மாவவட்ட எல்லையில் சேர்க்கப்படவில்லை. எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ச்சியாக பசுமை மண்டலத்தின் சலுகைகளை பெறும் வாய்ப்பு உருவானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் பிரபாகர் அறிவித்தார். தமிழக அரசு அறிவித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறையின் ஆணை 217க்கு உட்பட்டு தொழில் நிறுவனம் மற்றும் வணிக கடை இயங்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சூளகிரி பகுதியை சேர்ந்த 52 வயது மற்றும் 60 வயதுள்ள இரு பெண்களுக்கு இன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 தினங்கள் முன்பு இவர்கள் பெங்களூர் சென்று திரும்பியதாகவும், அறிகுறி காட்டாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இரு பெண்களும், வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பசுமை மண்டலம் என்ற அந்தஸ்திலிருந்து, ஆரஞ்சு மண்டலம் என்ற நிலைக்கு போயுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்.
அதேநேரம், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளதால் அந்த மாவட்டங்களும் தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளது. புதிதாக இன்று யாருக்கும் அங்கு நோய் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications