கிணற்றில் விழுந்து மூழ்கிய அக்காள், தம்பி.. 'அந்த ஒரு மணி நேரம்'.. போச்சம்பள்ளி அருகே பெரும் சோகம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த அக்காள் தம்பி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த வழியாக யாருமே செல்லாததால் குழந்தைகள் இறந்து போனது யாருக்குமே தெரியாமல் இருந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன சென்னையில் உள்ள பேக்கரி ஒன்றில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு ஸ்ரீநிகா (வயது 5) என்ற மகளும், அனிருத் (3) என்ற மகனும் இருந்தார்கள்

இதற்கிடையே சந்திரிகா தனது மகள், மகனுடன் கொல்லஅள்ளி பூலான்குட்டையில் வசித்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீநிகா, அனிருத் தங்களது வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றில் அக்காள், தம்பி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்கள்.
பின்னர் அவர்கள் 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மணி நேரத்துக்கு யாரும் செல்லவில்லை. இதனால் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. இதனிடையே விளையாட சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த சந்திரிகா அவர்களை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது தனது 2 குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததை அறிந்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த அக்காள், தம்பியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications