கிருஷ்ணகிரி வன்கொடுமை.. பள்ளி மாணவிக்கு ஆதரவாக நிற்கும் வழக்கறிஞர்கள்! எடுத்த மிக முக்கிய முடிவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்துள்ள பர்கூர் அருகே 8ம் வகுப்பு படித்த வந்த மாணவி, அதே பள்ளியில் வேலை செய்து வந்த ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் மூன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாகக் கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என்று வழக்கறிஞர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும், அதையும் தண்டி இதுபோன்ற கொடூரங்கள் நடந்து வருகின்றனர். அப்படி கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
கிருஷ்ணகிரி பலாத்கார சம்பவம்:
அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த ஒரு மாதமாகப் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்துச் சரியான தகவல்கள் தெரிவிக்காத நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரே மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது தான் அந்த மாணவிக்குக் கருக்கலைப்புச் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், உடனடியாக இது தொடர்பாக மகளிர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். விசாரணையில் அதே பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனால் மாணவி கருவுற்றும் இருக்கிறார்.
முற்றுகை:
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர், போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது போலீசார் அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராக போவதில்லை எனக் கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..
தீர்மானம்:
கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கு ஆதரவாகக் கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் யாரும் பிணை மனு தாக்கல் செய்யவும் வழக்கில் ஆஜராகவோ கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற வழக்கறிஞர்களும் இந்த வழக்கில் யாரும் ஆஜராக முன்வரக்கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு ஆதரவாகச் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications