மரண பயம் காட்டி வந்த சிறுத்தை பிடிபட்டது! கிருஷ்ணகிரி மக்களுக்கு அதிகாலையில் வந்த நல்ல சேதி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி, வனத்துறையினரின் கூண்டில் பிடிபட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் பகுதியில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக அங்குள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது இந்த சிறுத்தைப் புலியானது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை சில சமயங்களில் தாக்கிக் கொன்றுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை புலியை தீவிரமாக தேடி வந்தனர்.
சில சமயங்களில் அந்த ரிசார்ட் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் இந்த சிறுத்தை நடமாடி வருவது பதிவாகி இருந்த நிலையில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பது என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்.
மேலும் அந்த ரிசார்ட் அருகே மல்லிகை ஃபார்ம்ஸ் எனப்படும் தனியாருக்கு சொந்தமான மற்றொரு ரிசார்ட் பகுதியில் சிறுத்தை புலியை பிடிப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்ட கூண்டு ஒன்றை வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதை வனத்துறையினர் கண்டு உறுதி செய்தனர். இதை எடுத்து பிடிப்பட்ட சிறுத்தையை வனப்பகுதிக்குள் விடுவது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சிறுத்தை புலிக்கு மயக்க ஊசி செலுத்துவது தொடர்பாக கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் இதன்பிறகு சிறுத்தையை அடர்ந்த காட்டில் விடுவதாக திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வருடங்களாக போக்கு காட்டி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications