ஓசூர் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்..பரபரப்பு!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் என உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரியில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கமாக விநியோகிக்கப்பட்ட குடிநீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அப்பகுதியில் ஒரு சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு இதே போல் உடல் உபாதைகள் ஏற்பட்டதால், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிக்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்றும் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு இதுவரை 27 பேர் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சின்ன எலசகிரி பகுதி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த மேலும் 24 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களும் ஓசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக உதவி ஆட்சியர் பிரியங்கா, மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு தண்ணீரில் கழிவு நீரில் கலந்துள்ளதா அல்லது வேறு காரணமா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications