கிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமதியின்றி பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள்.. கலெக்டர் கடும் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் அனுமதியின்றி பெண்கள் தங்கும் விடுதிகள், இல்லங்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்த பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ம் ஆண்டும் நடை முறைக்கு கொண்டு வரப் பெற்றது. அதன்படி, தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதிகளை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் விடுதிக்கு உரிமம் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெறுவ தற்கு பொதுப்பணித்துறையின் கட்டிட உறுதித் தன்மை சான்று, தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்படும் கட்டிட உரிமம் சான்று, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் விடுதி காப்பாளர், பாதுகாவலரின் மருத்துவச் சான்று, நன்னடத்தை சான்று ஆகியவை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.
உரிமம் பெறாமல் செயல் படும் பணிபுரியும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
எனவே, தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நடத்தும் உரிமையா ளர்கள், பதிவு செய்யப்படாமல் செயல்படும் விடுதிகளை உடனடியாக இணைதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரி யிலும், 04343-235717 தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications