ஓசூர் மக்களுக்கு செம குட் நியூஸ்.. வருகிறது பிரம்மாண்ட விமான நிலையம்.. ஆரம்பித்த பணிகள்!
கிருஷ்ணகிரி: ஒசூர் நகரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் இருந்து வருகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வேகமாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அது ஏற்கனவே தொழிற்சாலை ஹப் என்று அழைக்கப்படும் அளவுக்கு முன்னேறியுள்ளது.
பெங்களூருக்கு அருகிலேயே இருப்பதால் பெங்களூரில் இருந்து பல ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஓசூர் நோக்கி நகர்ந்து வருகின்றன.
ஓசூர்
இதனால் ஓசூர் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. முக்கியமாக ஓலா நிறுவனத்தின் இ பைக் தொழிற்சாலை காரணமாக தேசிய அளவில் ஓசூர் கவனம் பெற்றுள்ளது. இன்னும் பல நிறுவனங்கள் ஓசூர் நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
விமான நிலையம்
ஓசூருக்கு பல நிறுவனங்கள் வரும் நிலையில் இங்கு உள்நாட்டு விமான நிலையம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருவதால் விமான நிலையத்திற்கான தேவை அதிகம் ஆகியுள்ளது. இது ஓசூர் இன்னும் வேகமாக வளரவும் வழி வகுக்கும்.
ஓசூர் விமான நிலையம்
இந்த நிலையில்தான் ஓசூரில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் விடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனங்கள், அது தொடர்பான பணிகளை செய்ய விரும்பும் நிறுவனங்கள், இடங்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
விண்ணப்பம்
அடுத்த மாதம் இறுதிவரை TIDCO மூலம் இந்த விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க முடியும். இதன்பின் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, இடங்களை இறுதி செய்த பின் கட்டுமானம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓசூர் வரும் நாட்களில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.