கிருஷ்ணகிரி நவீனாவுக்கு வந்த ஆத்திரம்.. கணவனுக்கு ஒரே அடி.. உயிருடன் இல்லை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவனை உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரே அடியில் காலி செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுப்பழக்கமும், சந்தேகமும் வறுமையும் தமிழ்நாட்டில் பல்வேறு குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. தினமும் குடித்துவிட்டு வரும் கணவன் தகராறில் ஈடுபடுவதை கண்டு மனம் வெதும்பி சில பெண்கள் ஆத்திரத்தில் கணவனை அடித்துக் கொன்று விடுகிறார்கள்.. அதேபோல் சில கணவன்கள் குடிபோதையில் மனைவி என்றும் பாராமல் இரக்கமே இல்லாமல் சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்வதும் பல இடங்களில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குடித்துவிட்டு தினமும் தகராறில் ஈடுபட்ட கணவனை கன உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை செய்திருக்கிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே முத்துரையைச் சேர்ந்த 42 வயதாகும் பிரகாஷ்ரெட்டி தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார் விவசாயியான இவருடைய மனைவி நவீனாவுக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். பிரகாஷ்ரெட்டிக்கு தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறதாம். அப்படி மது அருந்திவிட்டு வருவது தட்டி கேட்டால் மனைவியிடம் குடும்ப தகராறு ஈடுபடுவதும் பிரகாஷின் வாடிக்கையாம்.
அப்படித்தான்.. ஏப்ரல் நான்காம் தேதி இரவு விவசாயி பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நவீனா அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி ஒரே ஒரு அடி அடித்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் பிரகாஷ். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ்ரெட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரகாஷ்ரெட்டியின் தந்தை நாராயணரெட்டி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நவீனாவைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரகாஷ்ரெட்டி மது குடித்துவிட்டு தினமும் நவீனாவை அடித்துத் துன்புறுத்தியதும், இதனால் ஆத்திரத்தில் அவர் பிரகாஷ்ரெட்டியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது. மனைவியே கணவனைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications