நபிகள் நாயகத்தின் மரபு.. இஸ்மாயிலி முஸ்லிம்களின் மதகுரு! மறைந்த ஆகா கானின் சிறப்புகள் தெரியுமா?
லண்டன்: நபிகள் நாயகத்தின் மரபில் வந்தவர் என்று இஸ்மாயிலி முஸ்லிம்கள் நம்பும் 4வது ஆகா கான் பிரின்ஸ் கரிம் அல்-ஹுசைனி இன்று காலமானார். தனது 20 வயதிலேயே கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் தலைவராக மாறிய இவர் யார்? இதோ முழு விவரம்..
ஷியா இஸ்லாத்தின் ஒரு பிரிவுதான் இஸ்மாயிலி முஸ்லிம் சமூகம். இதன் தலைவரான்தான் ஆகா கான் என்று அழைப்பார்கள். 19ம் நூற்றாண்டில் பாரசீக பேரரசர் ஒருவரால் இஸ்மாயிலி முஸ்லிம் சமூக தலைவர் 'ஆகா கான்' என அழைக்கப்பாடுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இன்று காலமான கரிம் அல்-ஹுசைனி, 4வது ஆகா கான் ஆவார். கடந்த 1957ம் ஆண்டு இவர் ஆகா கான் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது இவருக்கு வயது வெறும் 20 தான். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்தார்.

மத தலைவராக இருந்தாலும் மதநம்பிக்கை, கல்வி, மருத்துவம் மற்றம் வளர்ச்சி திட்டங்களை இவர் செயல்படுத்தி வந்திருக்கிறார். ஆகா கான் பெயரில் வளர்ச்சிக்கான நெட்வொர்க் (Aga Khan Development Network-AKDN), ஒன்று செயல்பட்டு வருகிறது. இது பல்வேறு நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய தனியார் வளர்ச்சி நெட்வொர்க்குகளில் இதுவும் ஒன்று.
ஆகா கான்கள் இஸ்லாத்தை உருவாக்கிய முகமது நபிகளின் நேரடி வழி வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். அந்த வகையில் 4வது ஆகா கான் ஆகிய பிரின்ஸ் கரிம் அல்-ஹுசைனியும் இவ்வாறே கருதப்பட்டார்.
முழு பெயர்: பிரின்ஸ் ஷா கரீம் அல்-ஹுசைனி
பதவி: நிஜாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் இமாம். 4வது ஆகா கான்
பிறப்பு: டிசம்பர் 13, 1936, ஜெனீவா, சுவிட்சர்லாந்து
இறப்பு: பிப்.05 2025 (வயது 88)
குடியுரிமை: பிரிட்டன்
குடும்பம்: இளவரசர் அலி கான் மற்றும் இளவரசி தாஜ்-உத்-தவ்லா ஆகியோரின் மகன். சுல்தான் முகமது ஷாவின் பேரன். இவர் 3வது ஆகா கானாக இருந்தார்.
பொறுப்பு: சுல்தான் முகமது ஷா கடந்த 1957ம் ஆண்டு காலமானபோது, 20வது வயதில் 4வது ஆகா கானாக பொறுப்பேற்றுக்கொண்டார். சுல்தான் முகமது ஷாவுக்கு மருமகனாக அலி கான் இருந்தாலும், அவரை தவிர்த்துவிட்டு இஸ்லாமியர்கள் நவீன காலத்தை சேர்ந்த கல்வியறிவு அதிகம் பெற்றவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்பதால் பேரன் ஷா கரீம் அல்-ஹுசைனியை 4வது ஆகா கானாக தேர்ந்தெடுத்தார்.
கல்வி: லு ரோஸியில் (சுவிட்சர்லாந்து) படித்தார், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (1959) இஸ்லாமிய வரலாற்றில் பட்டம் பெற்றார் .
பங்களிப்பு: ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்மாயிலி முஸ்லிம்களை வழிநடத்தினார். மேலே குறிப்பிட்ட AKDN நெட்வொர்க்கை நிறுவியது இவர்தான். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு போன்றவற்றிக்கு தொடர்ந்து நிதி அளித்து வந்திருக்கிறார். ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளை கட்டியிருக்கிறார்.
மிக குறிப்பாக நவீன கல்வி மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்காக இவர் வாதிட்டிருக்கிறார்.
வாரிசு: இவரது வாரிசு யார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது உயில் வாசிக்கப்படும் போது தான் அது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications