‛‛ஆபாசபடம்’’.. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய தொகுப்பாளர்.. சர்ச்சையில் பிபிசி நிறுவனம்!
லண்டன்: பிபிசி செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொகுப்பாளர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கு பல லட்சம் ரூபாய் அனுப்பி வைத்து அவரது ஆபாசபடங்களை பெற்றது பெரியளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உலகில் இயங்கும் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தில் ஒன்றாக பிபிசி உள்ளது. பல நாடுகளில் இந்த செய்தி நிறுவனத்தின் அலுவலகங்கள் உள்ள நிலையில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே பிபிசி நிறுவனம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட 2002ல் குஜராத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஆவணப்படங்களை 2 பாகங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது பிபிசி நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதற்கு அங்கு பணியாற்றும் தொகுப்பாளர் தான் முக்கிய காரணம். அதுபற்றிய விபரம் வருமாறு: பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனத்தில் பிரபல தொகுப்பாளராக ஒருவர் உள்ளார். இவரை பற்றி சில நாட்களுக்கு முன்பு சன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.
அதில், ‛‛பிபிசி தொகுப்பாளர் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக இளம்வயது நபருக்கு 35 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.3.72 லட்சம்) வழங்கி உள்ளார். மேலும் அவரிடம் இருந்து ஆபாசபடங்களை பெற்றுள்ளார்'' என செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும் அந்த இளம்வயது நபரின் தாய் அதனை உறுதி செய்திருந்தது பற்றியும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரிட்டன் கலாசாரத்துறை அமைச்சர் லூசி பிரேசர் தலையிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் அதிக வருத்தத்தை அளிக்கிறது. இதுபற்றி பிபிசி இயக்குனர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். இதுபற்றி விரைவாக விசாரணை நடத்தப்படும் அவர் கூறியுள்ளார்'' என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பிபிசி செய்தி நிறுவனம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையை தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான தொகுப்பாளர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை பிபிசி உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உண்மைகளை கண்டறியும் நோக்கத்தில் விரைவாக செயல்பட்டு வருகிறோம். ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மற்றும் விசாரணை தொடர்பான கூடுதல் தகவல்கள் தேவை. தற்போது விசாரணை என்பது தொடர்ந்து வருகிறது.
மேலும் பிபிசி எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் சாதாரணமாக எடுத்து கொள்வது இல்லை. ஒவ்வொரு புகார்களையும் தீவிரமானதாகவே கருதுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலுவான கட்டமைப்புகள் உள்ளன. தற்போது ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் தேவையற்ற வதந்திகளை நாங்கள் கண்டிக்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி லண்டன் போலீசார் கூறுகையில், ‛‛பிபிசி சம்பவம் குறித்து எங்களிடம் பேசியது. இருப்பினும் நடவடிக்கை தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. '' என தெரிவித்துள்ளனர். இருப்பினும் கூட இந்த விவகாரத்தில் பணம் கொடுத்து ஆபாசபடம் வாங்கிய இளம்வயது நபர் ஆணா, பெண்ணா என்பதையும், அப்படி செய்த பிபிசி தொகுப்பாளரின் பெயரும் இன்னும் வெளியாகவில்லை.
பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் இதுபோன்ற பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாவது முதல் முறையல்ல. கடந்த மே மாதம் தொகுப்பாளர் பிலிப் ஸ்கபீல்டு என்பவர் சக பணியாளருடன் பாலியல் உறவு வைத்திருந்த குற்றச்சாட்டில் பணியில் இருந்து விலகினார். இது நடந்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில் தான் தற்போது மற்றொரு தொகுப்பாளர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications