ஒரு வேளை நான் இறந்திருந்தால்.. பக்காவாக திட்டமிட்ட அதிகாரிகள்.. போரிஸ் ஜான்சன் பரபரப்பு பேட்டி
லண்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற பின்னர் என்னுடைய இறப்பை எவ்வாறு அறிவிப்பது என்பது குறித்து மருத்துவர்களும் அதிகாரிகளும் தயார் நிலையில் இருந்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா இருப்பது கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல்முறையாக கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு லேசான அறிகுறிகளே இருப்பதால் அவர் ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் ஏப்ரல் 5-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 24 மணி நேரத்திற்குள்ளான தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அந்தளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்தது.
கொரோனாவிலிருந்து மீண்டு வந்த போரிஸ் ஜான்சன்.. மருத்துவர்களின் பெயரை குழந்தைக்கு வைத்து நெகிழ்ச்சி
மருத்துவமனை
இதையடுத்து அவருக்கு 3 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசமும் கொடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு ஜான்சன் மறுபிறவி எடுத்தார். அவர் கொரோனாவிலிருந்து மீண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
வியூகங்கள்
இந்த நிலையில் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றது குறித்து சிறப்பாக சிகிச்சை அளித்து தனக்கு உயிர் கொடுத்த மருத்துவர்கள் குறித்து ஆங்கில செய்தி நிறுவனமான சன்னிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் என்னை தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்ற போது நான் இறந்துவிட்டால் அடுத்தது எப்படி அறிவிப்பது என்பதற்கான வியூகங்களை மருத்துவர்களும் அதிகாரிகளும் வகுத்தனர்.
மருத்துவர்கள்
அப்போது எனக்கு எதுவும் புரியாவிட்டாலும் அந்த இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்யலாம் என அதிகாரிகள் திட்டமிடுவதை மட்டும் என்னால் உணர முடிந்தது. நிலைமை மோசமடைந்தால் என்னென்ன செய்யலாம் என்பது குறித்து மருத்துவர்களும் திட்டமிட்டனர்.
மறுப்பு
இதிலிருந்து எப்படி நாம் மீண்டு வர போகிறோம் என நினைத்தேன். ஆனால் நான் இறக்க போகிறேன் என்பதை மட்டும் நினைக்கவில்லை. நம்பிக்கையுடன் இருந்தேன். மருத்துவமனையிலிருந்து நான் மீண்டதெல்லாம் அசாதாரண விஷயங்கள். எனது உடல்நிலை மோசமாக இருந்ததை நான் முதலில் நம்ப மறுத்தேன்.
கட்டாயம்
மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முயற்சித்தேன். ஆனால் எனது ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்ததால் மருத்துவர்கள் என்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவற்றையெல்லாம் தற்போது திரும்பி பார்த்தால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தியது சரிதான் என தோன்றுகிறது.
பிறந்த குழந்தை
மருத்துவமனையில் இருந்த அனுபவம்தான் என்னை நோயை எதிர்த்து போராட வைத்தது, நாட்டையும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவியது. கொரோனாவிலிருந்து என்னை உயிருடன் மீட்டது கடினமான ஒன்று. அதை நான் மறுக்க மாட்டேன் என்றார். மருத்துவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக தனக்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு தனது குடும்ப பெயருடன் மருத்துவர்களின் பெயர்களையும் இணைத்து வைத்துள்ளார் போரிஸ் ஜான்சன். இவருக்கு சிகிச்சை அளித்த நிகோலஸ் பிரைஸ், நிகோலஸ் ஹார்ட் ஆகிய இருவரும் தொற்று நோய் துறையில் நிபுணர்கள் ஆவார்கள்.