"ஆல்பா" வைரஸே பரவாயில்லையாம்.. இந்த "டெல்டா" வைரஸ்தான் படு வேகமாக பரவுதாம்.. !
ஆல்பா வைரஸைவிட வேகமாக டெல்டா வைரஸ் பரவுகிறது
லண்டன்: கொரோனா புதுப் புது ரகமாக அவதரித்து வரும் நிலையில் தற்போது உலவி வரும் ஆல்பா வைரஸை விட டெல்டா வைரஸ் 60% அதிகமாக பரவக் கூடியது என்று இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சொல்லியுள்ளனர்.
டெல்டா வைரஸ் முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் பெயர் ஆல்பா. இதில் எது வேகமாக பரவுகிறது என்று ஆய்வு நடந்துள்ளது...
அதை செய்தவர்கள் லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த நீல் பெர்குசன் தலைமையிலான குழுவினர்தான். இதுகுறித்து நீல் பெர்குசன் சொன்னதாவது:

ஆல்பா
"ஆல்பா வைரஸை விட சக்தி வாய்ந்ததாக டெல்டா வைரஸ் உள்ளது. பரவல் வேகம் ஆல்பாவை விட டெல்டாவுக்கு 60% அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் நிச்சயம் 3வது அலை பரவும்... கென்ட் பகுதியில்தான் முதலில் ஆல்பா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த 3வது அலை பரவல் எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலி எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

மரணங்கள்
மேலும் டெல்டா வைரஸை தற்போதைய தடுப்பு மருந்துகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்பதும் ஆய்வு நிலையில்தான் உள்ளன. அதேசமயம், கடந்த 2வது அலையை விட 3வது அலையில் மரணங்கள் குறைவாக இருக்கும் என்று நம்புகிறோம். காரணம் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. அவை சக்தி வாய்ந்தவையும் கூட... அதனால், பலி எண்ணிக்கை அதிகம் இருக்காது என்று கொஞ்சம் நம்பலாம்.. அதேசமயம், இது நிலையில்லாதது.. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் கவனத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது" என்றார் அவர்.

இங்கிலாந்து
இங்கிலாந்தில் தடுப்பு மருந்து கொடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அந்த நாட்டின் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோருக்கும் ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்டா வைரஸ், பைசர் மற்றும் ஆஸ்டிரஜெனகா ஆகிய தடுப்பூசிகளின் திறனை குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அபாயம்
அதாவது ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களுக்கு அது பலன் தருவதில்லையாம். அதேசமயம், 2 டோஸ் பெற்றவர்களுக்கு ஓரளவுக்கு அபாயம் குறைகிறதாம். இதற்கிடையே, ஜுன் 21ம் தேதி முதல் லாக்டவுனை முழுமையாக நீக்கப் போவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதனால் பேரபாயம் விளையும் என்ற அச்சம் இருப்பதால் அந்த முடிவை போரிஸ் ஜான்சன் திரும்ப பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications