ஒட்டுமொத்த நாடும் தேடும் 'அந்த' ஒற்றை நபர்... பிரிட்டனில் பரபரப்பு... காரணம் இதுதான்
லண்டன்: பிரேசில் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை நபரை ஒட்டுமொத்த பிரிட்டன் நாடே தற்போது தேடி வருகிறது.
கடந்தாண்டு மே மாதம் முதல் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வந்தது. அப்போது பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்தது.
இந்த உருமாறிய கொரோனா காரணமாகப் பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வகை கொரோனா என்பது மற்ற கொரோனா வகைகளைவிட சுமார் 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரிட்டனில் கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் காரணமாக இந்த ஊரடங்கு வரும் மே மாதம் வரை கூட நீட்டிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. உருமாறிய கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே, அந்நாட்டு மக்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்திற்கு தடை
ஏற்கனவே நிலைமை மோசமாக உள்ளதால், மற்ற கொரோனா வகைகளும் நாட்டில் பரவக் கூடாது என்பதில் பிரிட்டன் கவனமாக உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் போக்குவரத்திற்கு அந்நாட்டு அரசு, மே 17ஆம் தேதி வரை தடைவிதித்துள்ளது. மேலும், எந்த உருமாறிய கொரோனா வகையும் நாட்டில் பரவவில்லை என்பதை உறுதி செய்ய, உருமாறிய கொரோனா வகைகளை கண்டறியும் சோதனைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
பிரேசில் வகை கொரோனா
அதன்படி நடத்தப்பட்ட சோதனையில், பிரிட்டன் நாட்டிலுள்ள ஆறு பேருக்கு அதி தீவிரமான பிரேசில் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி உறுதி செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் மொபைல் எண், முகவரி உள்ளிட்ட எந்த தகவல்களையும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அந்நாட்டின் கொரோனா தடுப்பூசி அமைச்சர் நாதிம் ஜஹாவி, இதனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரை தற்போது தேடி வருவதாகவும் கூறினார். மேலும், பிப்ரவரி 12ஆம் தேதி கொரோனா சோதனை மேற்கொண்ட அனைவரும் தாமாக முன் வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒற்றை நபர்
பிரேசில் நாட்டின் வடக்கு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த ஒரு நபரை தற்போது ஒட்டுமொத்த பிரிட்டனே தீவிரமாக தேடி வருகிறது.