எப்ஸ்டீன் பைல்ஸ்.. பிரிட்டன் இளவரசர் அதிரடி கைது! சிக்கும் முக்கிய புள்ளிகள்!
லண்டன்: இங்கிலாந்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரூ கடந்த 2001 முதல் 2011 வரை பிரிட்டனின் சிறப்பு வர்த்தக தூதராக இருந்தார். அப்போது ரகசிய அரசு ஆவணங்களை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் உடன் சட்டவிரோதமாக ஷேர் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்களில் உள்ள மின்னஞ்சல்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
ஆண்ட்ரூ தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பிரிட்டன் சட்டப்படி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது பெயரை போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, அவரின் தனிப்பட்ட கௌரவம் பாதிக்க கூடாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
எனவே போலீசார் தரப்பில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரை, அரசு பதவியில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் பேரில் கைது செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டன் ஊடகங்கள் கைது செய்யப்பட்டது ஆண்ட்ரூதான் என்பதை உறுதி செய்துள்ளன.
அரசு பதவியில் இருந்த போது முறைகேடு என்பது பிரிட்டனை பொறுத்தவரை தீவிர கிரிமினல் குற்றமாகும். ஒரு அரசு அதிகாரி, பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே, தவறான காரியத்தை செய்வது, அல்லது கடமையை செய்ய தவறுவது அரசு பதவியில் முறைகேடு செய்ததாக கருதப்படும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தனது தம்பியின் செயல் குறித்து அரசர் மூன்றாம் சார்லஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையை செய்யும், போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதேபோல பிரிட்டன் பிரதமர், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்றும், யாரும் மேலானவர்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications