எங்கோ தொலைவில் இருந்த சின்ன காயின்.. உரு தெரியாமல் அழித்த "லேசர்" ஆயுதம்! மிரள வைத்த பிரிட்டன்
லண்டன்: தொலைதூரத்தில் இருக்கும் நாணயம் சைஸில் இருக்கும் இலக்குகளைக் கூட தாக்கி அழிக்கும் வகையில் புதிய வகை லேசார் ஆயுதங்களைப் பிரிட்டன் இப்போது வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இந்த நவீனக் காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் அதிநவீன ஆயுதங்களில் சோதனை செய்து வருகிறது. குறிப்பாக ஏவுகணை சார்ந்த ஆயுதங்களில் அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகிறது.

லேசர் தாக்குதல்: இதற்கிடையே இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று அதன் முதல் லேசர் ஆயுத சோதனை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதாவது இப்போது டிரோன்கள் தான் பெரும்பாலும் நமது வான்வழி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், அந்த டிரோன்கள் வானத்தில் பறந்து வரும் போதே அவற்றை காலி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு உயர் ஆற்றல் கொண்டதாக இந்த லேசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் பொதுவாக அதிவேகமாகச் செல்லக்கூடியவை. அவற்றைத் துப்பாக்கி குண்டுகள் மூலம் வீழ்த்த முடியாது. ஏவுகணைகளைத் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஒரு ஏவுகணையைப் பயன்படுத்தினாலே பெரிய செலவாகும். எனவே, ஏவுகணைகளுக்குப் பதிலாகக் குறைந்த செலவில் டிரோன்களை சுட்டு வீழ்த்த இந்த லேசர் பயன்படும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
டிரோன்கள்: மிகத் தொலைவில் வேகமாகச் செல்லும் டிரோன்களை தாக்க வேண்டும் என்றால் இது மிகத் துல்லியமானதாக இருக்க வேண்டும். இந்த லேசரை வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நாணயத்தைக் கூட துல்லியமாகத் தாக்க முடியுமாம். இந்த அதிநவீன ஆயுதத்திற்குப் பிரிட்டன் "டிராகன்ஃபயர்" என்று பெயரிட்டுள்ளது.
இந்த ஆயுதம் ஸ்காட்லாந்தில் உள்ள ஹெர்பிரைட்ஸ் ரேஞ்சில் கடந்த ஜனவரி மாதம் முதலில் சோதனை செய்யப்பட்டது. அது தொடர்பான வீடியோ தான் இப்போது வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், "விலையுயர்ந்த வெடிமருந்துகளை நம்பியிருப்பதை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறைக்கும், நமது நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தலையும் இது குறைக்கும்" என்றார்.
டிராகன்ஃபயர்: இந்த அதிநவீன டிராகன்ஃபயர் ஆயுதத்தைப் பிரிட்டன் நாட்டின் ராணுவம் மற்றும் கடற்படை என இரண்டுமே வரும் காலத்தில் பயன்படுத்துவார்களாம். இந்த லேசரை 10 வினாடிகள் லேசரை சுடும் போது ஆகும் செலவு என்பது ஒரு மணிநேரத்திற்கு ஒரு ஹீட்டரைப் பயன்படுத்த ஆகும் செலவுக்குச் சமமானதாகும். ஒரு முறை இதைப் பயன்படுத்தினால் ஒன்றுக்கு 10 பவுண்டுகளுக்கும் குறைவாகவே செலவாகுமாம்.
அதிகபட்சம் எத்தனை தொலைவு வரை இதனால் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதைப் பிரிட்டன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், கண்ணில் புலப்படும் எந்தவொரு இலக்கையும் தாக்க முடியும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.
ஏன் முக்கியம்: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த சோதனை முடிவுகள் ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் லேசர் போன்ற எனர்ஜியை வைத்து எந்தளவுக்கு அதி சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்க முடியும் என்பதை நமக்கு இது காட்டுகிறது." என்றார். ஏற்கனவே அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் லேசர் ஆயுதங்கள் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆயுதத்தைப் பிரிட்டன் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் உக்ரைன் போர் சமயத்தில் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல காசா யுத்தத்திலும் டிரோன் பயன்பாடு அதிகமாகவே இருந்தது. வரும் காலங்களிலும் போர் ஏற்பட்டால் டிரோன்கள் அதிகம் பயன்படுத்தும். இந்தச் சூழலில் தான் குறைந்த செலவில் அந்த டிரோன்களை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தைப் பிரிட்டன் உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications