I Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்
லண்டன்: "போலீஸாரே கொலை செய்தால் யாரை அழைப்பது", என்னால் மூச்சுவிட முடியவில்லை (போலீஸார் மிதித்த போது பிளாய்டு கூறிய கடைசி வார்த்தை) என கோஷமிட்டு ஜார்ஜ் பிளாய்டு படுகொலையை கண்டித்து லண்டன், பெர்லின் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். அப்போது விசாரணை அதிகாரி, அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தார்.
இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதிலும் மினசோட்டா, ஜார்ஜியா, ஓகியோ, கென்டக்கி, டெக்சாஸ், கொலம்பியா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வழக்கு பதிவு
இதையடுத்து பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் கடைகள் சூறையாடப்பட்டன. சில ஹோட்டல்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. நாளுக்கு நாள் முற்றி வரும் இந்த போராட்டம் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வலுப்பெற்று வருகிறது.

ஜெர்மனி
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் கையில் கருப்பினத்தவரின் வாழ்க்கை பிரச்சினை
(Black Lives matter) என்ற பேனரை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். போலீஸாரின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் இனவாதத்தை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள்
போலீஸ் அதிகாரி கழுத்தை நெரித்த போது ஜார்ஜ் கடைசியாக கூறியது "என்னால் மூச்சுவிட முடியவில்லை" (I cant breathe) என்பதுதான். இந்த I can't breathe என்ற பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். போலீஸ் அதிகாரி மீது மனித படுகொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரினர்.

லண்டன்
பெர்லின் மற்றும் லண்டனில் உள்ள வீதிகளில் போலீஸாரின் வன்முறையை எதிர்த்து போராடினர். பெர்லினில் போராட்டக்காரர்கள் முகக் கவசங்களை அணிந்தபடியும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தபடியும் போராடினர். போலீஸாரே கொலை செய்தால் யாரை அழைப்பது, எனது தோலின் நிறம் மரண தண்டனையாக இருக்கக் கூடாது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

அமைதி இல்லை
மேலும் சிலர் நீதி இல்லை, அமைதியும் இல்லை, நான் அச்சுறுத்தலும் இல்லை என்ற பதங்கள் அடங்கிய டீ சர்ட்டுகளை அணிந்திருந்தனர். சகோதரத்துவம் ஜெர்மனியின் தெருக்களில் மட்டும் இல்லை. கால்பந்து மைதானங்களிலும் பிரதிபலித்தது. கால்பந்து வீரர் மார்கஸ் துராம் கோல் அடித்தவுடன் முட்டி போட்டு கொண்டு அந்த வெற்றியை ஏற்றார்.

திரண்ட மக்கள்
லண்டனில் டவுனிங் ஸ்ட்ரீட், நாடாளுமன்ற வளாகம், அமெரிக்க தூதரகங்கள் முன்பு போராட்டம் நடைபெற்றது. டிராஃபல்கர் ஸ்குயர் முன்பு திரண்ட மக்கள் Black Lives Matter, I cant breathe என்ற பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். "இன்று ஜார்ஜ் பிளாய்டு, இன்னும் எத்தனை பேர்?" என கேட்டு இதுவரை கொலையுண்ட கருப்பினத்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதுபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை, டிரம்ப் டவர்ஸ் முன்பும் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications