உருமாறிய இந்திய கொரோனா வைரஸ்- இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வுகள் சந்தேகம்: பிரதமர் போரிஸ் ஜான்சன்
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தாமதமாகலாம் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது. கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் உக்கிரமாக பரவி வரும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
இந்தியாவில் பரவும் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸூக்கு பி1. 617.2 என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி மேலும் 20 நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இங்கிலாந்திலும் தாக்கம்
இங்கிலாந்திலும் இந்திய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த வாரம் 520 பேருக்கு இந்திய உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது. இது தற்போது 1313 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே லண்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

போரிஸ் ஜான்சன் கவலை
இந்த சந்திப்பின் போது பேசிய போரிஸ் ஜான்சன், இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் கவலை தரக் கூடியதாக இருக்கிறது. இங்கிலாந்தில் ஜூலை 21-ந் தேதி முதல் கொரோனா கால கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.

தளர்வுகள் தாமதமாகும்
ஆனால் இந்திய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலால் தளர்வுகளை அமல்படுத்துவது தாமதமாகலாம். இதனால் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசிகள் போடுவதற்கான இடைவெளி காலம் 12 வாரத்தில் இருந்து 8 வாரங்களாக குறைக்கப்படுகிறது.

முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி
40 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போடவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications