எழுதவும் தெரியாது, படிக்கவும் முடியாது.. இருந்தாலும் டாப் மார்க்.! குறைபாடுகளை கடந்து சாதித்த இளைஞர்
லண்டன்: எழுதப் படிக்கவே முடியாத 18 வயது இளைஞன் ஒருவர், பள்ளிப் படிப்பில் டாப் மார்க் பெற்று தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகத்திலும் சேர்ந்துள்ளார்.
நாம் தேர்வுகளில் பாஸ் செய்யவே பல்டி அடிக்க வேண்டி இருக்கும் நிலையில், எழுதப் படிக்கவே தெரியாத மாணவர் அதிக மதிப்பெண் பெற்ற ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த மாணவர், அடுத்து பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலக்க உள்ளார்.

எழுதப் படிக்கத் தெரியாது
பிரிட்டன் நாட்டின் பாத் என்ற பகுதியைச் சேர்ந்த ஆலிவர் சாட்விக் என்பவர் தான் அந்த மாணவர். இவருக்குச் சிறு வயது முதலே டிஸ்லெக்ஸியா குறைபாடு கடுமையாக உள்ளது. இதனால் அவரால் ஆறு வயதுக் குழந்தையால் எப்படிப் படிக்க முடியுமோ அதே அளவு தான் படிக்க முடியும். இந்த குறைபாடு உள்ள போதிலும், விடா முயற்சியுடன் இறங்கிய அவர், தனது மேல்நிலை படிப்பில் A டிகிரி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகம்
அத்துடன் நின்றுவிடாமல் அவர் இப்போது பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கணிதப் பட்டப்படிப்பை ஆரம்பிக்கவும் தயாராக உள்ளார். இது தொடர்பாக ஆலிவர் சோமர்செட் கூறுகையில், "என்னுடைய டிஸ்லெக்ஸியா என்னை மிகவும் பாதிப்பது உண்மை தான். அதேநேரம் எதைச் செய்வதற்கும் அது தடையாக இருப்பதில்லை. எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் எனக்குத் தினசரி நாம் செய்யும் வேலைகளில் தான் சவால் ஏற்படும். அது தவிர எனக்கு வேறு பிரச்சினை எதுவும் இல்லை" என்றார்.

தாயார்
சிறு வயதில் தனது மகன் மற்ற குழந்தைகளைப் போல இல்லை என்பதைக் கண்டறிந்தது குறித்து அவரது அம்மா சோஃபி சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார். "அவர் பள்ளி படிக்கும் போது, தினமும் குடும்ப டின்னரில் மதியம் என்ன சாப்பிட்டாய் எனக் கேட்போம். அவன் எப்போது "உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ்' என்று தான் கூறுவான். இந்த உணவு ரொம்ப பிடிக்கும் என்பதால் அதைச் சாப்பிடுவதாக நாங்கள் நினைத்தோம்.

மெனுவை கூட படிக்க முடியாது
ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது அவரால் மெனுவில் இருக்கும் உணவுகளைப் படிக்க முடியவில்லை என்று! இதன் காரணமாகவே சமாளிக்கத் தினமும் தனக்குத் தெரிந்த ஒரே விஷயத்தைக் கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார் என்பது பின்னர் தான் எங்களுக்குப் புரிந்தது. இப்போதும் கூட அவனால் மெனுவைப் படிக்க முடியாது.. ஆனால், முன்னர் இருந்ததற்கு இப்போது பல வகையில் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்" என்றார்.

பள்ளிக் கல்வி
ஆலிவர் ஜூனியர் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு எழுதப் படிக்கச் சரியாக வரவில்லை. அங்கிருந்த ஆசிரியர்கள் சீக்கிரம் இதைக் கற்றுக்கொள்வார் என்றே கூறியுள்ளனர். ஆனால் அப்போதே தாயார் சோஃபிக்கு வித்தியாசமாக எதையோ கவனித்துள்ளார். அதன் பின்னர் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் மூலம் பாடம் படிக்கவும் முயன்றுள்ளனர். இருப்பினும், அங்கும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

சிறப்புப் பள்ளி
இதையடுத்து தாயார் சோஃபி தனது மகனை இரு டிஸ்லெக்ஸிக் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த அவர்கள், ஆலிவருக்கு தீவிரமாக டிஸ்லெக்ஸியா உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு அனுப்புவதை சோஃபி நிறுத்தி உள்ளார். மேலும், தனது மகனை டிஸ்லெக்ஸியா சிறப்புப் பள்ளிக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளார்,

சாதித்த இளைஞர்
இருப்பினும், இதை ஏற்றுக்கொள்ளாத ஆலிவர். உதவியாளர் ஒருவருடன் படிக்க தொடங்கி உள்ளார். ஆலிவருக்கு டிஸ்லெக்ஸியா இருந்த போதிலும், அவரால் எண்களை எளிதாகப் படிக்க முடிந்தது. இதை தெரிந்து கொண்ட அவர் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். விடா முயற்சியுடன் படித்த அவர் இப்போது மேல்நிலை கல்வியை முடித்துள்ளார். அடுத்து பல்கலைக்கழகத்திலும் பொறியியல் கணிதப் பட்டப்படிப்பை ஆரம்பிக்க உள்ளார். தொடர் முயற்சி குறைபாடுகளைக் கடந்து சாதிக்க வைக்கும் என்பதற்கு ஆலிவரே சிறந்த உதாரணம்.












Click it and Unblock the Notifications